Monday, April 20, 2015

சங்கரனாவது... கிங்கரனாவது? -- மஹா பெரியவா





சங்கரனாவது...  கிங்கரனாவது?
(கார் ஓட்டின பெரியவா!?)

எழுதியவர்;பி.சுவாமிநாதன்.
தட்டச்சு;வரகூரான்.நாராயணன்.

[கட்டுரையில் சில சாராம்சங்கள்]
பெரிய கட்டுரையாய் இருந்ததால் சுருக்கிவிட்டேன்.

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம்
ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில்
பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு
தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும்
வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது
பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு
முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு
ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை
இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி
"என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப்
பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல்
பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக
திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச்
சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.

"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!"
என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட
வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா..

பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து?
நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு
தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர்
மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக்
கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம்
என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும்
பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.



வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே
வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து
நின்றது.பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான
வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்
காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும்
சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது
என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம்.
மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி
காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா
ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா
இரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க
முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா
கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார்.
மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள்

அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப்
பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று
சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற
ஒரு நப்பாசை.

"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப்
போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில்
இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன்.
நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா?
என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து
ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே
அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில்
இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர்
பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு
நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய
பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு
மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும்
மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக
காத்துக் கொண்டிருந்தனர் சதசிவம் தம்பதிகள்
.சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல 
வேண்டும் என்ற அவாவில்.

ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின்
தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..
அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக்
கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு
விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.

"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம்
ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே
வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது
ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா..
அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..
பஸ்ஸும் இல்லை..."

"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே
மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...
இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு
கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..
அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு
வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.
அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக.

"மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......
இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்
குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.
சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால்
புரியாதது மாதிரியும் இருந்தது.

"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம்
பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று
ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள
முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு
தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில்
இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து
""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு
ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து
வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி
ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு
வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே
இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்"

சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து
ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து
வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ
நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க..
நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு
இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார்.

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.
"அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும்
என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து
இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?"
என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும்
உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா
ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,

"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து
அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்.....
பெரியவா இருக்கும் திசையை நோக்கி
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம்
கூடவே அவரது மனைவியும்..


Posted here by Narayanan Ramaswamy










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

        காஞ்சி காமகோடி 
ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்






 1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்தமதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
            
5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.


                  

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்தஅபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது. 
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
                  
11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.




13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவேஇந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.




15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.





16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர். பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான். ‘சரீரம் த்வம் சம்போ:’ என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.

17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.




18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.






20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டுவாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.









Courtesy : POSTED IN FACEBOOK BY MAHAPERIYAVA BHAKTHAS

 Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos edited by self.(Narayanan Ramaswamy)

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

              திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!




  
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.


* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.




[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]



Courtesy :   Facebook post  :   Hariharan

Thanks for  Lord Venkateswara bhaktas for the beautiful photos and videos by channel 18  posted and edited by self.


கண்ணதாசனை மாற்றிய பெரியவர்

கண்ணதாசனை மாற்றிய பெரியவரும்








கண்ணதாசன் பெரியவர் மேல் இயற்றிய கவிதையும்.

"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
 தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
 கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
 கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
 எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
 தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!"

 சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

 காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

 தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டிவிபூதியைப் பெறுகிறார்.

 தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

 ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

 தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிதுவிபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

 மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

 நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதிகொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

 கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

 பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
 தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
 கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
 கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
 எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
 தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

 கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos edited by myself.
Thanks for Kannadasan photo posted in the internet.


Friday, April 17, 2015

"யார் ஸித்தர்?" மஹா பெரியவா

           
         "யார் ஸித்தர்?"









தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 


"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?




                      

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.