Tuesday, May 19, 2015

வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்

வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்

(ரா.கணபதியின் அற்புத எழுத்தாக்கம்)

மூலம்------------‘சங்கரர் என்ற சங்கீதம்’
ஆசிரியர்---------------ரா.கணபதி.










"ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்"

கோதை போற்றிய ‘கூடாரை வெல்லும் சீரை’ ஒரு ஸ்ரீவைஷ்ணவர் விஷயமாகவே ஸ்ரீசரணர் சிகரமேற்றிக் காட்டிய நிகழ்ச்சி.

அபாரமான சாஸ்திரப் புலமை பெற்ற மஹாவித்வான் என்று ஒருவரைப் பற்றி ஸ்ரீசரணர் கேள்விப் பட்டிருந்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்றபடி பண்டித திலகமான ஸ்ரீசரணர் அவரை சந்திக்க ஆர்வமாயிருந்தார்.

ஆனால் அந்தக் கற்றார் இந்தக் கற்றாரைக் காமுறவில்லை. காரணம் அவர் வீர வைஷ்ணவர், வீர சூர வைஷ்ணவர் என்றே சொல்லுமளவுக்குச் சென்றவர். ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் மேற்கொண்ட ஒரு ஏகதண்ட ஸன்னியாஸியைப் பார்ப்பதே தோஷம் என்று கருதியவர்.




அவருடைய ஊருக்கே பெரியவாள் சென்றிருந்தார். அப்போதும் ஊரே திரண்டு வந்து கண்ட பெரியவாளைக் காண அவர் வராமலே இருந்தார். பேதமறியா மன இசைவே திரண்டு வந்த திருவடிவமான பெரியவாளோ அந்தப் பெரியவர் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஊர் முழுதும் பெரியவாள் பெருமை பேசுவதை வைணவப்பெரியார் கேட்டார். அது அவரை எவ்வளவு தூரம் தொட்டதோ? ஆனால் பெரியவாளிடம் வந்து போகும் பல மஹாவித்வான்கள் அவரது வித்வத் பெருமையைச் சொல்லக் கேட்டபோது அப்பெரியாரும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

அதுவே தருணமென்று பெரியவாள் ஸத்வகுணரான ஒரு வித்வான் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார். வித்வான் வைணவர் வீடு சென்று மரியாதை முறைப்படி பெரியவாளின் அழைப்பைத் தெரிவித்தார்.

இவ்வளவு தூரம் பண்டிதர் பாமரர் புகழும் அந்தப் பெரியவரை தாமும்தான் சென்று பார்த்துவைப்போமே என்று வைணவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“கூப்டு அனுப்பிச்சிருக்கார். மாட்டேன்னு சொல்லப்படாதுதான். ஆனாலும் எனக்குச் செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறுகிறத்துக்கில்லை. அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம். அதுதான் யோஜனையா இருக்கு.” என்றார் அவர்.

அந்தப் பிரதிக்ஞைகள் என்னவென்று ஸ்ரீமடத்து வித்வான் கேட்டார்.

வைஷ்ணவர் மூன்று ப்ரதிக்ஞைகள்---அல்லது நிபந்தனைகள்----கூறினார். ஒன்று---பெரியவாளை அவர் நமஸ்கரிப்பதற்கில்லை. இரண்டு----பெரியவாள் ப்ரஸாதம் கொடுத்தால் ஏற்பதற்கில்லை. மூன்று---வித்வத் ஸம்பாவனை என்று சால்வை போர்த்துவது போல் ஏதேனும் பெரியவாள் செய்தாலும் அதையுங்கூட அங்கீகரிப்பதற்கில்லை.

இப்படிக் கடும் நிபந்தனை போடுபவரை எதற்காக வர்வேற்க வேண்டும் என்று நமது வித்வானுக்கு---அவர் ஸத்வகுணிதான் எனினுங்கூட------தோன்றிவிட்டது.

மரியாதையாகவே அங்கிருந்து விடை கொண்டு ஸன்னிதானம் சென்று, “ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை. அவர் ரொம்ப நிர்தாக்ஷண்யமா கண்டிஷன் போடறார்” என்றார்.

“அப்படியா! ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கேள்!” என்றார் ஸ்ரீசரணாள்.

வித்வானுக்குப் புரியவில்லை. எந்த வித்வத்திற்கும் புரிபடாத ஸூக்ஷ்ம நோக்கில் பேசுபவரல்லவா பெரியவாள்?

“எப்படி நல்ல சேதின்னு புரியலையே?” என்றார் வித்வான்.

“கண்டிஷன் போடறார்னு நீங்க சொன்னதுலேந்தே அவர் முடுஞ்ச முடிவா ‘வரவே மாட்டேன்’னு சொல்லலை. கண்டிஷன் எதுக்கோ உட்பட்டா வரேன்—னு சொல்றார்—னுதானே ஆறது? அந்த மட்டுக்கும் நல்ல சேதிதானே?”---பெரியவாள் இன்னகை பூத்து “என்ன கண்டிஷன்?” என்றார்.

‘சொல்றத்துக்கே மனஸ் இடம் குடுக்கல்லை’ என்று கூறி, வித்வான் வீர வைஷ்ணவப் பெரியாரின் மூன்று நிபந்தனைகளை சிரமப்பட்டுத் தெரிவித்தார்.

பெரியவாளோ ஸகஜமாக, “அவர் இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு? அவருக்கு இயலாதப்ப அவர் கண்டிஷன் போட்டதிலே என்ன தப்பு? எனக்கு நெஜமாவே அவர் ஒரு வித்வத் ஸ்ரேஷ்டர், அவர் கிட்ட புதுசா ஏதோ கொஞ்சமாவது க்ரஹிச்சுக்கப் பார்க்கலாம்னு இருந்தா கண்டிஷனை நான் பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?” என்று நியாயம் கேட்டார் ஸத்யமூர்த்தி!.

அநுபூதி கண்ட மஹாபுருஷனுக்கு யாரைப் பார்த்து என்ன ஆக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவரோ நரவேடம் பூண்டு, ஆதரிச நிலைகளை நமக்குக் காட்டுவதில் வித்யையில் இருக்க வேண்டிய ஆர்வம், அதன் பொருட்டாகக் காட்டவேண்டிய விநயம் இவற்றில் நமக்குப் பாடம் கொடுக்கவே, தாம் ஸர்வக்ஞராக இருந்த போதிலும் வேறொரு வித்வானிடமிருந்து கொஞ்சமாவது க்ரஹித்துக்கொள்ள இயலுமா என்று பார்ப்பதற்காக அவர் விதிக்கும் கடும் நிபந்தனைகளுக்கு உடம்பட்டுக் காட்டினார்.

[ வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்]

வித்வான் ப்ரதிக்ஞா—பங்கமில்லாமலே தம்மிடம் வரலாம் என்று ஸ்ரீசரணர் செய்தியனுப்பினார்.

அவரும் பெருமிதத்துடன் வந்தார்.

பெரியவாள் அழகிய ஸம்ஸ்கிருதத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகளைக் கலந்து, அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கென இடப்பட்டிருந்த மணையில் அமரச் சொன்னார்.

அதுவே அவரது கடினத்தில் சிறிது நெகிழ்வை ஏற்படுத்தியதென்றாலும், நமஸ்காரம் செய்யாமலேதான் அமர்ந்தார்.

ஸ்ரீபாஷ்யம் (‘ப்ரஹ்ம ஸூத்ர’த்திற்கு ஸ்ரீ ராமாநுஜரின் பாஷ்யம்) பற்றியே முக்யமாகப் பெரியவாள் அவரிடம் கேட்கலானார். ‘கேட்கலானார்’ என்பது போகப் போக அந்தப் பெரியார் கேட்க இந்தப் பெரியவாள் சொல்வதாகவே உருமாறிற்று1 அவரிடம் இவர் கொஞ்சமாவது க்ரஹித்துக் கொள்ள இடமிருந்ததோ என்னவோ, இவரிடமிருந்து அவர் நிறையவே க்ரஹித்துக் கொண்டார் என்பதை அந்த அறிஞர் கேட்டுக்கொண்ட ‘பா’வமும் அவரது முகமலர்ச்சியுமே காட்டியது.

பண்பு மிக்க ஸ்ரீசரணர் அவரை ஊக்கி ஊக்கி நிறையக் கூறவும் வைத்தார். ஓர் அறிவு மலையிடம் பேசுகிறோம் என்று புரிந்து கொண்ட வைஷ்ணவரும் உத்ஸாஹத்துடன் தமது பாண்டித்தியத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்று உயர்த்திக் காட்டாமலே பெரியவாள் ஸ்ரீசங்கர பாஷ்யத்தில் இப்படி இப்படி என்றும் அங்கங்கே சொல்ல, அந்த அறிஞர் அவற்றிலும் ஆழ்பொருள் இருப்பதை ஒப்பி மகிழாமலிருக்க முடியவில்லை.

ஆக நெடுநேரம் சம்பாஷணை நடந்து இனிக்க முடிந்தது.

இரு வித்வான்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இனிமைதான்! நம் விஷயமான இதய இனிமை இல்லை!

அதுவும் வருகிறது இனி!

சிரம பாராட்டாது அந்தப் பெரியவர் வந்து நெடுநேரம் தம்மை வித்வத் கடலாட்டியதில் தமது மகிழ்ச்சியையும்—நன்றியையுமே---தெரிவித்து அவருக்குப் பெரியவாள் விடை கொடுத்தார்.

அவரோ தம்மைத் ‘தாஸன்’ என்று சொல்லிக்கொள்ளுமளவுக்குத் தழைந்து,” பெரியவாளுக்குத் தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கு இல்லை. ஆன தாஸனுக்குத் தெரியாத கருணை பெரியவாளூக்கு இருந்துதான் கூப்டு அனுப்பி அநுக்ரஹிச்சிருக்க”---என்று சொல்லி, தண்டகாரமாக நமஸ்கரிக்க முற்பட்டார்.

‘கருணை’, ‘அனுக்ரஹம்’ என்ற சொற்கள் வந்து விட்டதோ இல்லையோ? இதயமும் வந்து விட்டது!

நமஸ்கரிக்க முற்பட்டவரை, “வேண்டாம்!ப்ரதிக்ஞா பங்கமாயிடும்” என்று பெரியவாள் தடுத்தார்.

ஆனால் அவரோ, ‘ப்ரதிக்ஞையெல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுப் பன்ணினதுதானே? ஸன்னிதானத்துல அதுக்கு ப்ரஸக்தியில்லே [அதைப் பொருத்துவதற்கில்லை]” என்பதாக தெய்வங்களின் மட்டத்தில் ஸ்ரீசரணாளைக் கூறி நமஸ்காரம் செய்தே தீர்த்தார்!

தெய்வமாகவே பொலிந்துகொண்டு ஸ்ரீசரணர் அதை ஏற்றார்.

“மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்” என்றும் வைஷ்ணவர் தாமாகக் கேட்டுப் பிரஸாதம் பெற்றார். அதாவது, இரண்டாவது நிபந்தனையையும் அவரே தகர்த்துக் கொண்டார்.

“ என் ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையையும் விடலாம்னு தோணினா, ஒரு மஹாவித்வான் வந்து மடத்துல அவருக்கு ஸம்பாவனை பண்ணலே—ங்கற கொறை எனக்கு இல்லாம இருக்கும்” என்றார் ஸ்ரீசரணர்.

“பெரியவா எது பன்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர் கூற, பெரியவாள் மிக உயர்ந்த சால்வை தருவித்து ஸ்ரீமடத்து வித்வானைக் கொண்டு அதை அவருக்குப் போர்த்தினார்.









Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

யோக புருஷர்; ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.


யோக புருஷர்;ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

யார் ஸித்தர்?"

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்








பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 

"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பெரியவாளின் தியாகம்"


"பெரியவாளின் தியாகம்"




 


சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்




ஒரு வனப் பிரதேசத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.

பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, மூன்று ஆந்திர
வைதீகர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஸ்நானம்,
ஸந்த்யை,தேவதார்ச்சனம்- எல்லாம் இனிமேல் தான்.

அவர்கள் சுயம்பாகிகள். தாங்களே சமைத்துச்
சாப்பிடுவார்கள்.

ஆனால், அந்த முகாமில், அதற்கெல்லாம் வசதியில்லை.
"சரி, போய் நித்யகர்மாக்களை முடித்து விட்டு வாருங்கள்"
என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள், பெரியவா.




சிஷ்யர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
சிரமசாத்யமான ஒரு காரியத்தைச் சொல்லி 
விடுவார்களோ?என்று, உள்ளூர அச்சம்,கவலை.

அரைமணிக்குப் பின் அவர்கள் வந்து 
நமஸ்காரம் செய்தார்கள்.

"உங்களுக்கெல்லாம் சரியானபடி போஜனம் செய்விக்க
வசதிப்படவில்லை. உப்புசப்பில்லாத என் பிக்ஷா 
பக்குவங்களை உங்களுக்குக் கொடுக்கச் 
சொல்லியிருக்கிறேன்".என்றார்கள், பெரியவா.

சிஷ்யர்களுக்கு அதிர்ச்சி- பெரியவா பிக்ஷக்காக
செய்யப்பட்டவைகளை இவர்களுக்குக் கொடுத்து விட்டால்,
பெரியவாளுக்கு என்ன பிக்ஷை?

"இன்று சம்பாசஷ்டி, நான் சாப்பிடக் கூடாது.
பால் மட்டும் போதும்.." என்று சிஷ்யர்களுக்கு சமாதானம்.

பெரியவாளின் தியாகத்தைக் கண்டு, சிஷ்யர்களின்
கண்களில் நீர் துளித்தது.







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"கணபதியும் நானே!"


"கணபதியும் நானே!"

சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
(நெட்டில் கிடைத்ததால் தட்டச்சு கொஞ்சமே)














நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம்.

ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம்.

அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம்.

சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” என்று கையைக் காட்டினார்.

ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ?

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம்.

கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள்.

நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"


"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"
(லோக கருணை)













சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்
குறைகளையும் கஷ்டங்களையும் திருப்பித் திருப்பி
சொல்லிவிட்டு, 'பெரியவாள் அனுக்ரஹம் பண்ண
வேண்டும்' என்று வேண்டும் காட்சி ஸர்வஸாதாரணம்.
பெரியவாளை தரிசித்து விட்டு ஒன்றும் வேண்டாமல்
செல்பவர்கள் மிக மிக அரிது. 

இந்நிலையில் தினசரி விடியற்காலம் விசுவரூப
தர்சனத்திலிருந்து தொடங்கி, தொடர்ந்து பல மணி
நேரம் பக்தர் கூட்டம் அலைமோதித் தம் கஷ்ட 
நஷ்டங்களை பல முறை (வலம் வந்து வந்து)
கூறினாலும் கூட நிகரற்ற பொறுமையுடன்
அதைக் கேட்டு தன் திவ்ய கரத்தை உயர்த்தி அபயம்
கூறும் அருளை யார்தான் விளக்க முடியும்?

ஒரு பாட்டி காஞ்சி மடத்தில் ஒரு சமயம் தன் குடும்ப
சச்சரவு பற்றி திரும்பத் திரும்பக் கூறினார்.
அந்த செய்திகளைப் பெரியவாளின் செவியில்
விழும்படி கூறும் ஒரு சிப்பந்தி, சற்றுக் கடிந்து 
கொண்டு உரத்த குரலில் 'பாட்டி உங்களுக்கு வேறு 
வேலையில்லை?எத்தனை தடவை திருப்பி திருப்பி
கூறுவது? என்றார்.

ஸ்ரீபெரியவாள்,"ஏண்டா! யாரது? ஏன் கத்தரே?"

"யாரோ பாட்டி, சொன்னதையே திருப்பித் திருப்பி 
கூறுகிறாள்."

"என்ன சொல்றா, என் காதில் விழவில்லையே
மறுபடி ஒரு முறை நீ கேட்டுச் சொல்லு" என்றதும்
பாட்டிக்கு எத்தனை ஆனந்தம்!

சில நேரத்தில் கஷ்ட பரிஹாரங்கள் கூறுவார்கள்.
பக்தர்களின் நிதிநிலையைக் கேட்டு, அதற்கு
ஏற்றபடி கோவில்,குளம்,தானதர்மம் செய்யுமாறு
உத்திரவாகும். அதில் ஒரு நிகழ்ச்சி.

வணிகத்துறை பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் வந்து
மஹாஸ்வாமிகளைத் தரிசித்துக் கூறினார்.

எனக்கு பல நாட்களாக பிஸினஸ் மந்தம்.
பல கவலைகள். ராத்திரி படுத்தா தூக்கம் வரவில்லை
மன உளச்சலை தாங்க முடியவில்லை. பெரியவாள்
அருள் தேவை.

ஸ்ரீபெரியவாள், "நீ ஒரு கார்யம் பண்ணுவாயோ?"

"காத்துக் கொண்டிருக்கேன்"

"பௌர்ணமி அன்று இரவு உன்னால் முடிந்த மட்டில்
ஆகாசத்தில் பூர்ண சந்திரனைப் பார்த்துண்டே,
ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை சந்திரமண்டலத்தில்
இருப்பதாக தியானம் பண்ணு.ஸகல கவலையும் விலகும்."









Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Thursday, May 14, 2015

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? அருள்வாக்கு






           ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?




வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.

ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு.

‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள்.

மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்






 நன்றி  :  ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு)

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.