Thursday, April 16, 2015

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன? மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை


வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?



"வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.
1928... மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ "கோவிந்த கோவிந்த...' என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. ""இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?'' எனக்கேட்டார் பெரியவர்.

 

""பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்... அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,'' என்றார் ஒருவர்.

""சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!'' என்றார் பெரியவர்.

""அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,'' என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

""நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,'' என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், ""அடியிலே பொக்கிஷம்' என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், ""இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,'' என்றனர். "விரைவில் நடக்கும்' என ஆசிர்வதித்த பெரியவர், ""அது சரி...உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்...அவர் சவுகரியமா இருக்காரா!'' என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
""அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,'' என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ'' என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை






நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015,

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, April 15, 2015

குத்து விளக்கு பூஜை -- சைதாபேட்டை அருள்மிகு திருபுரசுன்தரி உடனயா ஸ்ரீ சௌந்தரீஸ்வரர் திருகோவிலில்


குத்து விளக்கு பூஜை


சென்னை - சைதாபேட்டையில்  அமைதியாக ஆன்மிக  ஒலியை பரபிவரும் அருள்மிகு திருபுரசுன்தரி உடனயா ஸ்ரீ சௌந்தரீஸ்வரர்  திருகோவிலில்  - குத்து விளக்கு பூஜை - தமிழ் வருட பிறப்பனா நேற்று 14-04-2015  சிறப்பாகவும்  அமைதியாகவும் இறை அருளாலும்  காஞ்சி  பரமச்சார்ய மற்றும் புது பெரியவா , பாலா பெரியவா  அருளொடும்  சிறப்பாக நடந்தேறியது 






















                                        



Monday, April 13, 2015

"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு"


"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், 

எனக்குக் குருக்கள்- என்ற பொருளில்,

 நான்  ஜகத்குரு"



"நீங்கள் தான் ஜகத்குரு" 

(மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்)

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி.
பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்
ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.
பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள்சொக்கிப் போனார்.உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம்'இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். 
(பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.)
காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. 
நகரத்தின் முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான
பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை.
'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?...
ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்
கேட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு-
என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை)
ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"
(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்-
என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை
அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின்
மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த
சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்
கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?)
என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)

"சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும்,பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம்
ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை.

அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி,
கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள்
பிரமித்துப் போய்விட்டார்கள். "நீங்கள் தான் ஜகத்குரு"
என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை,
அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து
நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Saturday, April 11, 2015

"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி"

"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி"
(என்னே கருணை!)






சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

எந்த ஊரில் (பொட்டல் கிராமமாக இருந்தாலும்)
இரவு எவ்வளவு நேரமானாலும் கூட ஸ்ரீ பெரியவாளின்
முகாமிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆகாரம்
செய்து வைக்குமாறு சிப்பந்திகளுக்கு ஆக்ஞை
செய்வார்கள். அதோடு நிற்காமல், சற்று நேரத்திற்குப்
பிறகு அந்த சிப்பந்திகளை தனித்தனியே அழைத்து
'வந்தவாளுக்கு என்ன ஆகாரம் பண்ணி வைத்தாய்?
என்று வினவும் பாங்கு பெரியவாளுக்கு உரியது.

வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது.

பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம் பெரியவாள், "எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று கேட்பார்கள்.

"என் பாக்கியம்"

"சிவாஸ்தானம் யானைகட்டித் தெருவிலே உள்ள
வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு,காரம்
பக்ஷணங்களை பண்ணி நீயே போய் கொடுத்துட்டு வா"

பிறகு சில நாட்களில் அந்தப் பாடசாலை குழந்தைகள்
வந்தால் உடனே, "அன்று பக்ஷணம் வந்ததா?
சாப்பிட்டாயா? என்று அக்கறையோடு கேட்பார்கள்.

(மாடுகூடத் திங்காத அழுகல் வாழைப்பழம்
வேதபாடசாலைப் பையன்களுக்கு' என்று பழமொழிபோல்
கூறப்பட்ட காலத்தில் ஸ்ரீபெரியவாளின் பெரிய புரட்சி இது)

ஸ்ரீமடம் எங்கு முகாம் செய்தாலும் பெரியவாளின்
உத்திரவுப்படி, விசேஷமாக, கோடை காலத்தில்
தண்ணீர் பந்தல் போல் பக்த ஜனங்கள் யாவர்க்கும்
நீர்மோர் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.

விசேஷமாக ஓரிருக்கை கிராமத்தில் கடும் கோடையில்
பாலாற்றின் கரையில் பெரியவாள் குடிசையில் அமர்ந்து
கொண்டு, வருபவர்கள் அனைவருக்கும் நீர்மோர்
வழங்கும் குளிர்ச்சியான காட்சி வர்ணிக்க முடியாது








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..."


"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா?
..என்னைப் பார்க்க வந்தாளா?..."





(3 சம்பவங்கள் ஒரே பதிவில்)

சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(ஒரு பகுதி) 

ஊழியர்களோடு பரிவும்
மற்றும் மூன்று. ஸ்வாரஸ்ய சம்பவங்களும்.

("போகி-பல்லக்கு தூக்கி")

நாங்க சாப்பிடுகிற நேரங்களிலே,மகாப் பெரியவங்க
எங்களை சாப்பிட விட்டுட்டுச் சும்மா 
உட்கார்ந்திருப்பாங்க. நாங்க திரும்பி வந்ததும்,
சாப்ப்ட்டாச்சான்னு விசாரிப்பாங்க.

அப்போவெல்லாம் போகிகளுக்கு ஒரு நாளைக்குப்
படி- ஆறு அணா. அது தவிர, குருவை நெல்
அறுவடையில், நூறு கலம்;சம்பா அறுவடையில்,
நூறு கலம் நெல் கொடுப்பாங்க.இந்த ஏற்பாடு
1963 வரை நடைமுறையில் இருந்தது.

ஒரு தடவை (பக்தவத்சலம் முதலமைச்சரா இருந்த
போது) கீழத் தஞ்சை புலவச்சேரிங்கிற இடத்திலேர்ந்து
விடியற்காலை மூணு மணிக்குப் புறப்பட்டோம்.
காளையார் கோவில்லே,காம்ப். தூரம் எழுபத்தஞ்சு
கிலோ மீட்டர்.

அங்கே போனதும், மகாப் பெரியவங்க, எங்க ஆளுங்களுக்கு
குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கும்படி உத்தரவு
போட்டாங்க.பாவம் போகிக்கெல்லாம் தோள் வலிக்கும்'னு
சொன்னாங்க.நாங்க நின்ன இடத்திலேர்ந்து, சுவாமிகள்
காம்ப்,ஒரு கிலோ மீட்டர் இருந்தது.

"நான் நடந்தே போறேன்"-ன்னு சொல்லி,நடந்தே போனாங்க.
அங்கேயிருந்து மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி,
சிவகங்கை போனோம். போனவுடனே,எங்களுக்கெல்லாம்
ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுத்தாங்க.

"இவாளுக்கு ரொம்ப சிரமம்.வடை-பாயசத்தோடு சாப்பாடு
போடு"-ன்னு உத்தரவு போட்டாங்க.(சொல்லும் போதே
கண்ணையனின் கண்கள் உணர்ச்சி மிகுதியால்
கலங்குகின்றன.

ஒரு நாள் காலை சுமாரா ஒன்பது மணி. வேதபுரி சாஸ்திரி,
சுவாமிகளுக்குத் தொண்டு செய்திட்டிருந்தார். அப்போ
சுவாமிகள் ஆசமனம் சங்கல்பம் செய்து ஜபம்
பண்ணிட்டிருந்தாங்க.பட்டணத்திலேர்ந்து சில பேர்
சுவாமிகளைப் பார்க்க வந்தாங்க. 'இப்போ பார்க்க
முடியாது'ன்னுட்டார்,வேதபுரி.

அவங்க போயிட்டாங்க.பெரியவங்க கண்ணை முழிச்சதும் 'பட்டணத்திலேர்ந்துவந்தவா, எங்கே?"ன்னு கேட்டார்.

"அவா போயிட்டா...."ன்னார், வேதபுரி.

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா?
..என்னைப் பார்க்க வந்தாளா?..."

அப்போ நான் பக்கத்தில் இருந்தேன்.

"அவா பஸ்ஸ்டாண்டிலே நின்னுண்டிருப்பா,
..அழைச்சிண்டு வா"ன்னு பெரியவங்க சொன்னாங்க.

நான் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன்.

அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். 
வேகமா வந்து தரிசனம் பண்ணிட்டுப் பேசினாங்க....

மடத்துக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கணும்னு
வேண்டிக்கிட்டாங்க.

அப்போ,பெரியவங்க, "போகிக்கு ஏதாவது உதவி
செய்யுங்கோ"ன்னு சொன்னாங்க.எங்கமேல
அவ்வளவு பிரியம்.

நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்.
கொள்ளிடக்கரையிலே, மேனாவிலே தபஸ்
பண்ணிட்டிருந்தாங்க பெரியவங்க.இருட்டு வேளை.

மேனேஜர் வந்து மெள்ளக் கதவை நகர்த்தினார்.
சுவாமிகளைக் காணோம்! திடீர்ன்னு ஆயிடிச்சு!
இரண்டு நிமிஷம் கழிச்சு,இருட்டிலேர்ந்து,
'என்ன?'-ன்னு கேட்டுண்டே பெரியவங்க வர்ராங்க!..

"மகாசுவாமிகள் மேனாவிலிருந்து இறங்கிப்
போனதை நீங்களெல்லாம் பார்க்கவில்லையா?"

"கடவுளே! அதுதானே, தெரியலே!..
..கதவு, மூடியபடி தானே இருக்கு.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். - கண்ணதாசன்


அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். 
கண்ணதாசன்சொன்னது




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"(கண்ணதாசன்-சொன்னது)
(அர்த்தமுள்ள இந்து மதம் 8-வது புத்தகத்தில்)

அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.




உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை.

லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார். அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்"


"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!(பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.)
சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,

குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான். வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள். ஒருநாள் அந்த பன்னண்டு வயது பாலன் சொன்னான்...."பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ? அதுனால எனக்கு வெலையக்கொஞ்சம் கொறைச்சு குடேன் " தர்மமான கமிஷனை கேட்டார்.


பாட்டி மறுத்தாள். இன்னுயிரையே இலவசமாக தரவேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால் ! சுவாமிநாதனும் விடாமல் அடமாக இருக்க, பாட்டி அசைந்து கொடுக்கவில்லை.
"போ! இனிமே ஒன்கிட்ட நான் வாங்க போறதே இல்லை" என்றான் கோபமாக.
"வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா, என் பொழைப்பே இல்லாம போயி, ஒன்னை பூர்ணகும்பம் வெச்சு கூப்பிடுவேன்னு நெனைச்சுண்டியோ?" பாட்டி அதைவிட கோவமாக சொன்னாள்.
"முடிவா சொல்லு பாட்டி...நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்!"
என்று மிரட்டிப் பார்த்தார்.அவள் மசியவில்லை.
"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்வதால், திண்டிவனமே விழாக்கோலம் பூண்டது. காரணம், ரெண்டு மாசம் வரை அந்த ஊரில் ஓடி விளையாடி செல்லப்பிள்ளையாக இருந்த சுவாமிநாதன்தான், இன்று சங்கராச்சாரியாராக விஜயம் செய்கிறார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தங்கள் வீட்டு குழந்தை பால தண்டாயுதபாணியாக ஜொலித்துக்கொண்டு வரப்போவதால், பூர்ணகும்பம் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
அன்று சுவாமிநாதனிடம் முறுக்கிக்கொண்ட முறுக்கு பாட்டியும் பூர்ணகும்பம் ஸித்தம் பண்ணினாள். உள்ளே பழைய குரல் "போயேன். பூர்ணகும்பம் குடுத்து உன்னை கூப்பிடுவேனோ?" அன்று அந்த சமத்து சக்கரைக்கட்டியை விரட்டி அடித்தோமே! அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் ! குழந்தை சுவாமி நம்முடைய பூர்ணகும்பத்தை ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா?

இதோ குழந்தை குருஸ்வாமி தேஜஸ் பொங்கும் ரூபத்தோடு, பாட்டி வீட்டு வாசலில்! அன்று சமத்தாக அளவோடு நின்ற களை, இன்று முகத்தில் தாய்மை பொலிவோடு, தெய்வீகம் பொங்கியோட பாட்டி முன்னால் வந்து நிற்கிறது.


"இதோ நம் வீட்டுக்கருகே வந்து விட்டாரே! இப்போது நான்
என்ன செய்வேன் ?"என்று ஒன்றும் புரியாமல் கதறிக் கண்ணீர்
விடுகிறாள். அவள் வீட்டுக்கு எதிரேயே பல்லக்கு நின்றது.
"அந்த பாட்டி ஏன் உள்ளேயே இருந்து எட்டிப் பார்க்கிறார்?
வெளியே வரச் சொல்லுங்கள்' என்று அன்புக்கட்டளை
பிறக்கிறது.தயாராக இருந்த பூர்ண கும்பத்தைப் பார்த்த பெரியவா
"அவளிடமிருந்து அதை வாங்குங்கள்!" என்கிறார்.
அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் "பார்த்தாயா!
கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட
வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்"
என்று சிரித்து அவள் பயத்தைப் போக்கினார்.


பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.












Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  
Thanks to Mahaperiyava bhaktas for the  photos.