Tuesday, February 17, 2015

“Equipoise என்றால் “உங்களுக்குத் தெரியுமோ?” என்று பெரியவா கேட்டார்கள்




“சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?
“இதுதான் equipoise!…”

பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம்
பயின்றார்கள்?”

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஸ்ரீமடம், இளையாத்தங்குடியில் முகாம்.

அரசு அதிகாரி, நாலைந்து நண்பர்களுடன், காரில்
புறப்பட்டு இளையாத்தங்குடி நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள்.பேசாமலே எப்படிப் பயணம் செய்வது?
பல பேச்சுக்களிடையில், அவர்கள் தரிசனம் செய்யப்
போகும் மகாஸ்வாமிகளைப் பற்றிய பேச்சும் வந்தது.

“பெரியவாளுக்கு சம்ஸ்க்ருதம் நன்றாகத் தெரியும்…”

“தமிழ், தெலுங்கு, கன்னடமும் தெரியும்…”

“இங்கிலீஷில் சில வார்த்தைகள்தான் தெரிந்திருக்கும்.
Working Knowledgeதான் இருக்கும்….”

“நாம் பேசும்போது, இடையிடையே இங்கிலீஷ் வார்த்தை
வந்துவிட்டால், புரிந்துகொள்வார்கள்….”

இளையாத்தங்குடி சென்று, பெரியவாள் அறைக்கு
வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். பத்து
நிமிஷத்துக்குப் பின், பெரியவா வெளியே வந்தார்கள்.
சுற்றிலும் ஆங்கிலம் நன்றாகப் படித்துத் தேர்ந்த அடியார்கள்.
அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் பெரியவா.

பெரியவா: ” ஒவ்வொரு language-லும் சில peculiar வார்த்தைகள்
இருக்கும். அந்த வார்த்தைகளை இன்னொரு பாஷையில்
சுலபமாக மொழிபெயர்க்க முடியாது. இங்கிலீஷில்
equipoise என்று ஒரு word.அதற்கு என்ன அர்த்தம்னு
சொல்லுங்கோ….”

ஒவ்வொருவரும், பல மாதிரியாக விளக்கம் கொடுத்தார்கள்.
ஆனால், எந்த ஒரு சொல்லும் அந்த ஆங்கிலப் பதத்தின் முழுத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை.

தரிசனத்துக்காக வந்திருந்த அரசு அதிகாரியையும் அவர்நண்பர்களையும் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ?”
என்று பெரியவா கேட்டார்கள்.

அதிகாரிக்குக் குப்பென்று வியர்த்தது. தட்டுத் தடுமாறி ஏதோ விளக்கம் சொல்ல முயன்றார்; தோற்றுப் போனார்.

“Equipoise என்றால் mental equanimity என்று அர்த்தம்”
என்று சொல்லிவிட்டு, (எல்லோரையும் அசரவைத்துவிட்டு!)
வேறு பேச்சுக்குப் போய் விட்டார்கள் பெரியவாள்.(அதாவது ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மனம் குமைந்து வருந்துவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை.)

சிறிதுதூரம் நடந்து சென்றபின், ஹால் நடுவில் நின்றார்கள்.

தூரத்தில், சுவரோரமாக, ஒரு முதிய அம்மையார்
உட்கார்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டிருந்தார்.
ஜபம் செய்து கொண்டிருந்தாற் போலிருந்தது.

“அந்த அம்மா எப்படி இருக்கா?”

“ரொம்ப சாந்தமா, அமைதியாக உள்ளுக்குள்ளே
சஞ்சலமில்லாமே…..”

“அவர் யார் தெரியுமோ?”

யாரும் பதில் சொல்லவில்லை.

“கே.எஸ்.வெங்கடரமணின்னு பெரிய எழுத்தாளர்.
நிறைய புஸ்தகம் எழுதியிருக்கார்.
Kandan, the patriot; Murugan, the tiller எல்லாம் பிரஸித்தம்.
(நானும் படிச்சிருக்கேன்!) இந்த நாவல்களில்
rural-setting ரொம்ப நேச்சுரலா இருக்கும்.
(அந்த அம்மாள் கே.எஸ்.வி-யின் மனைவி)

“பால் பிரண்டன் என்ற பிரெஞ்சு தத்துவஞானியை
திருவண்ணாமலைக்கு அழைத்துக்கொண்டு போனார்.
என்னிடமும் அழைத்துக்கொண்டு வந்தார்.
பால்பிரண்டனுக்கு நம்ம தத்துவங்களில் ரொம்பப் பிடிப்பு.

“இந்த தம்பதிக்கு, ஒரே பிள்ளை.
கே.எஸ்.வி.யும் போயிட்டார்.
பிள்ளை, சர்க்கார் விருந்தாளி! புரிகிறதா?
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கான்!

“சொந்த-பந்தம், சொத்து-சுதந்திரம் எதுவும் கிடையாது.
மலை மலையாய் சோகம்…! அந்த அம்மாள் முகத்தில்
சோகத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?

“இதுதான் equipoise!…”

பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?

நாவில் நிற்பது வாக் தேவதை;இல்லை, talk தேவதை
!





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்! - மஹாபெரியவா








நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்!

தினமலர்-ஜூலை8 2014

கண்ணெதிரே கோபுரம் இருக்கிறது.பார்க்காமலே அசட்டையாகச் செல்கிறார்கள் பார்வையுள்ளவர்கள். தலையை அப்படியே உயர்த்தி, ஒரு கும்பிடு போட்டு விட்டு சென்றால், எவ்வளவு புண்ணியம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், பார்வையற்ற 
குழந்தைகள் காஞ்சி மகாபெரியவரை மனக்கண்ணால் தரிசிக்க வந்த சம்பவம் பற்றி உங்களுக்குத் தெரியுமா! 

ஒருசமயம், காஞ்சிபுரத்திலுள்ள தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் மகாபெரியவர் தங்கியிருந்தார். அப்போது, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் ஒருவர் பெரியவரைத் தரிசனம் செய்ய வந்தார். அவர் சுவாமிகளிடம், ""அடுத்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளிக்குழந்தைகள் சுவாமிகளைத் தரிசிப்பதற்கு அழைத்து வரலாமென இருக்கிறேன். அவர்கள் பார்வை இல்லாதவர்கள். தங்களைத் தரிசிக்க முடியாது. எனவே, பெரியவர், அவர்களோடு இரண்டொரு வார்த்தைகள் பேசினால், ரொம்பவே சந்தோஷப்படுவார்கள். தங்கள் திருவாய் மொழி அவர்களுக்கு அனுக்கிரகத்தைத் தரும்,'' என்றார். பெரியவர் அதைத் தன் 
திருச்செவிகளால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஆசிரியர் சென்று விட்டார். 

சொன்னது போல், ஞாயிறன்று ஒரு தனி பஸ்சில் குழந்தைகளையும் அழைத்து வந்து விட்டார். பெரியவரின் தரிசனத்திற்காக அவர்களைக் காத்திருக்கச் சொன்னார். 

அப்போது, பெரியவருடன் இருந்தவர்கள், ""பெரியவர் மவுனவிரதம் இருக்கிறார். பார்வையுள்ளவர்கள் என்றாலாவது, தரிசனத்திற்காவது 
அனுமதிக்கலாம். இவர்களிடம் பேச வேண்டும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?'' என்றனர்.

இதைக் கேட்ட ஆசிரியர் அழுதே விட்டார். 

""ஐயையோ! குழந்தைகளுக்கு ஆசை வார்த்தை சொல்லி அழைத்து வந்து விட்டேனே! பெரியவருடன் பேச முடியாவிட்டால், அவர்கள் ரொம்பவே ஏமாந்து போவார்களே! பார்வையற்ற அந்த பிஞ்சுகளின் உள்ளம் புண்ணாகிப் போகுமே!'' என்று புலம்பினார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பெரியவர் அங்கே வந்தார். ஆசிரியரின் அழுகையை நிறுத்தச் சொன்னார். ஒவ்வொரு குழந்தையாக அழைத்து, அவர்களின் பெயர், ஊர், பார்வைக்குறைபாடு எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் அன்புடன் விசாரித்தார். அவர்களை ஆசிர்வதித்தார். பழங்கள், கற்கண்டை ஆசிரியரிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச் சொல்லி விடை கொடுத்தார். 

ஒரு சமயம், ஜனாதிபதி வி.வி.கிரி, பிரதமர் இந்திரா ஆகியோர் காஞ்சி மடத்திற்கு வந்த போது, பெரியவர் மவுனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அவர்களிடம் பெரியவர் பேசவில்லை. ஆனால், பார்வையற்ற
குழந்தைகளுக்காக தனது மவுனத்தைக் கலைத்தாரே! அந்தக் குழந்தைகள், என்றும் அவரை தம் மனக்கண்களால் கண்டு கொண்டிருப்பார்கள் தானே! 

சி.வெங்கடேஸ்வரன்










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"கபட சந்யாஸி" "பெரியவா கேட்ட காளிதாஸன் கதை"





"கபட சந்யாஸி"
"பெரியவா கேட்ட காளிதாஸன் கதை"

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்
நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து
அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.
வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர
சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து
கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,
உடன் சென்று கொண்டிருந்தோம்.

"நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்
பார்த்திருக்கியா?"

"இல்லே"

"நாகராஜா....நீ"

"இல்லே.."

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, " நீ கபட சந்யாஸியைப்
பற்றிக் கேட்டிருக்கியா?" என்று கேட்டார்.

"கேட்டிருக்கேன்...ராவணன்,அர்ஜுனன்..." என்றேன்.

"அவ்வளவு தானா?"

நான் தயங்கியபடியே, "காளிதாஸன்..." என்றேன்.

"காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?.."

"பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,
நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

"இல்லை..நீயே சொல்லு.."

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த
காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான
சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி
கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது
போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்
பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற
முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி
எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி
செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.
பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள் பெற்று,மாறுவேஷத்தில்
போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு
சந்யாஸியைப் பார்த்தபோது, 'இவர் காளிதாஸனோ'
என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து
"நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.
அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.
வெளியே வந்து விட்டேன்..."

"ஆ!.... என் போஜன் இறந்துவிட்டானா?"
என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,
வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்
தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி
சியாமளா தண்டகம் பாடி, "இதோ,போஜன்
எழுந்துவிட்டான்!" என்ற பொருள்பட
இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.
கடைசியில் "இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,
சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்..." என்றேன்.

பெரியவாள்,"ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.
நடந்து வந்த களைப்பே தெரியல்லே!" என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.
















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



தேடினேன் வந்தது! "இது வேண்டாமே' என்று சொன்னதோடு - மஹாபெரியவா



தேடினேன் வந்தது!

("இது வேண்டாமே' என்று சொன்னதோடு
, "நாளை பச்சைக் கடலை வரும்' )

ஆகஸ்ட் 13,2014,தினமலர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சுவாமிநாதன், தன் 11 வயது முதலே காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் டில்லியில் பணியாற்றிய சமயம், ஒருநாள் பகல் விமானத்தில் சென்னை வந்து மாலையில், காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் உள்ள சிவாஸ்தானத்தில், பெரியவரைத் தரிசிக்க உத்தேசித்திருந்தார்.

டில்லி பாலம் விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில், அரசு செயலர் ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்று, தான் காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசிக்க இருப்பதைத் தெரிவித்தார்

ராமச்சந்திரன் தன் வீட்டு தோட்டத்தில் காய்த்திருந்த பச்சைக் கொண்டைக்கடலையை நிறைய பறித்து பெரியவரிடம் சமர்ப்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். 

அன்று ஏதோ காரணத்தால் விமானம் புறப்பட தாமதமானது. அதனால், மாலையில் சென்னை வர வேண்டிய விமானம் இரவில் தான் வந்து சேர்ந்தது. மறுநாள் காலையில் சுவாமிநாதன் சிவாஸ்தானம் கிளம்பி வந்தார். பெரியவருக்கு சமர்ப்பிக்கும் திரவியங்களை எல்லாம் தட்டுகளில் எடுத்து வைத்தார். அருகில் இருந்த பெரியவரின் சீடர் ஒருவர், "" பச்சைக் கடலையை கொண்டு வந்துள்ளீர்களே! ஏதும் விசேஷமா?'' என்று கேட்டார். 

அதற்கு சுவாமிநாதன், வரும் வழியில் செயலர் ராமச்சந்திரனைச் சந்தித்த விபரத்தையும், அவர் கடலை பறித்து தந்து பெரியவருக்கு சமர்ப்பிக்க சொன்னதையும் தெரிவித்தார். 

அந்த சீடர்,"" நேத்து காலை சரியா 11 மணி இருக்கிறப்போ ஜபம், அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும், பெரியவர் பச்சைக் கொண்டைக் கடலை கிடைக்குமா?'' என்று கேட்டார். 

அருகிலுள்ள வயல் வரப்பெல்லாம் தேடிப் பார்த்தும் எங்கும் தென்படவில்லை. இல்லை என்று எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் பெரிய வெள்ளைக் கடலைகளை கொஞ்சமாக எடுத்து வைத்தேன்.

பெரியவரோ, "இது வேண்டாமே' என்று சொன்னதோடு, "நாளை பச்சைக் கடலை வரும்' என்று மட்டும் தெரிவித்தார். அதன்படி நீங்களும் கொண்டு வந்து விட்டீர்கள்,'' என்று சொல்லி, அதிகாரியை வியப்பில் ஆழ்த்தினார். 

காஞ்சிபுரத்தில் இருந்தபடியே, டில்லி லோதி ரோட்டில் பச்சைக் கடலை இருப்பதை அறிந்து, அதை வரவழைத்த முனிபுங்கவரான காஞ்சிப்பெரியவரின் ஞான திருஷ்டியைக் கண்ட அனைவரின் நெஞ்சமும் பரவசத்தில் ஆழ்ந்தது. 

சி. வெங்கடேஸ்வரன்







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



'தருணேந்து மௌலே - என்கிறார். நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார். -- மஹாபெரியவா

                                              




பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய
ஒரு பெரியவாள் அவதாரம் பண்ணப்போகிறார்"

சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(கட்டுரையில் ஒரு பகுதி)

பெரியவா, "என்னவோ சொல்லணும்னு நினைக்கிறே!
சொல்லிவிடேன்."

"பெரியவாளிடம் என்ன சொல்ல முடியும்.
ஸ்ரீதர ஐயாவாள் சுலோகம் ஒன்று நினைவுக்கு வரது"

"ஐயாவாள் சுலோகமா? பக்திரஸம் கொட்டுமே!
சொல்லு பார்க்கலாம்."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"இன்னொரு தடவை சொல்லு!..."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"எங்கே அர்த்தம் சொல்லு பார்க்கலாம்"

"இளம்பிறைச் சந்திரனைத் தலையில் சூடிக்கொண்ட
பெருமானே! உலகில் எல்லாரும் சொல்வார்கள்.-
சிவசிவ என்கிற மதுரமான நாமத்தை ரஸித்துச்
சொல்பவர்கள் துயரப்படமாட்டார்கள் என்று.
அது வெறும் பேச்சுதான். உண்மையிலே-
மனுஷனாகட்டும்,பசு-பூச்சியாகட்டும், எந்த ஜீவனாவது
கஷ்டப்படுவது அவர்களுடைய கண்களில் பட்டு விட்டால்,
அந்தக் கஷ்டம் தனக்கே வந்து விட்டது போல
உருகி விடுவார்கள்"

"நன்னாச் சொன்னே! அதிலே ஒரு ஸ்வாரஸ்யம்
கூட இருக்கு. கவனித்தாயா!"

"என்ன? நான் கவனிக்கவில்லையே!"

'தருணேந்து மௌலே - என்கிறார்.
நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார்.
அவருடைய குருநாதர் போதேந்த்ர ஸரஸ்வதி பூஜை பண்ணின
மூர்த்திதானே சந்த்ரமௌளீச்வரர்.அவரிடம்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள்.

.......................................................................................................................................

கட்டுரையாளர்; இவன் உதட்டிலே ஒன்று சொல்ல வேண்டுமென்று
ஒரு துடிப்பு வந்தது.சொல்லியிருந்தால் அபசாரமாகுமோ,என்னவோ?

நமக்குள்ளே பரிமாறிக்கலாமே!

முன்னூற்றைம்பது வருஷங்கள் முன்னால் இருந்த ஸ்ரீதர ஐயாவாள்,
பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய ஒரு பெரியவாள்
அவதாரம் பண்ணப்போகிறார் என்று,அந்த சந்த்ரமௌலீசுவரரிடம்
விண்ணப்பித்திருக்கிறாரே.!
...........................................................................................................................................

பின்குறிப்பு- இந்த கட்டுரையே பிறர் கஷ்டத்தை பார்த்து மனம்
வேதனைப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடக்கும் சம்பாஷணை.
சம்பவம் பெரிதாக இருந்ததால் அதை தட்டச்சு செய்யவில்லை.
பிறிதொரு சமயம் அதையும் இங்கே போஸ்ட் பண்ணுவேன்
வரகூரான்)











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


காஞ்சி பரமாச்சார்யாள் அருளிய பவன்ஸ் ஜர்னல் கட்டுரை…





“வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?”

காஞ்சி பரமாச்சார்யாள் அருளிய பவன்ஸ் ஜர்னல் கட்டுரை…

Kanchi Sankaracharyar

குலபதி கே.எம்.முன்ஷி, பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானோருள் ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய செல்வத்தையும் வாழ்க்கைமுறையையும் அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். ‘பாரதீய வித்யா பவன்‘ என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரியச் செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர ‘பவன்ஸ் ஜர்னல்‘ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார்.

காஞ்சி பரமாச்சார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும் பேறு இந்தப் பத்திரிக்கைக்குக் கிடைத்தது. பொதுவாக, பெரும் அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சிப் பெரியவர், லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி, அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று, வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்க முடியாமல் தவித்துக் கூக்குரலிட்டதைக் கேட்டுத் திருடன்தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர, நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆச்சார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

பீடம் ஏறிய வரலாறு

அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராச்சார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாச்சார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்தச் சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சக்கட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும், ஆகையால் அவரையே அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாச்சார்யாள்!

இப்படியாகத்தான், சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திருநாமம் கொண்ட பரமாச்சார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

இரு நிகழ்ச்சிகள்

1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்தபோது 12 வயதுச் சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக் கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆச்சார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்தது. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவற்றைப் பகிரங்கமாகக் கூறி, மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆச்சார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை ஆச்சார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நேசித்துப் போற்றியோர்

அடுத்து ஆசார்யாள், தன்னை மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார், இறுதியில் கட்டுரையை “கடவுள், சிலரைப் பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார்” என்ற வரியுடன் முடிக்கிறார்.

ராஜாஜியின் பாராட்டு

அற்புதமான இந்தக் கட்டுரை வெளியானவுடன், ராஜாஜி இப்படிப்பட்ட அரிய கட்டுரையைப் பெற்று வெளியிட்டதற்காக பவன்ஸ் ஜர்னலைப் பாராட்டினார் என்றால் கட்டுரையின் அருமையைச் சுலபமாக எவரும் உணர்ந்து கொள்ளலாம்.







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ! " - மஹாபெரியவா








"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ! "

Experience of Sri A.K.Padmanabhan -

தகவல்.-நெட் உபயம்.

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். 

இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.

”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”

நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.

ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?

இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். 

ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.

“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.

“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.

பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.