Saturday, April 11, 2015

நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன்.








மஹாபெரியவா - (Sharing Message)

1957-59 சென்னை மாநகரின் இந்த அரை நூற்றாண்டு சரித்திரத்தில் ஒரு பொற்காலம். கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.

முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு “உனக்கு என்ன வேண்டும்” என்று வினவினார்.

“எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?” என்று வினவினான்.

“அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?” – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.

அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்” என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். “நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்” என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.

“உனக்கு எங்கே வேலை?” தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.

“கிண்டியில்” என்று கூறியபின் “ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?” எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.

ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – “தெரியாதப்பா” என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.

“தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது’ சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?” எனக் கணை தொடுத்தான்.

கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் “அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?” என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.

“அதானே நான் போய்ட்டிருக்கேன்” என்ற பதிலில் “இதென்ன அநாவசியக் கேள்வி” என்ற உதாசீனம்.

“ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?...” அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.

“இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?”

“இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே”

“இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே”

மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!

“நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்” என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
“சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?... ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா” என்று அபயக்கரம் உயர்த்தினார்.

அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!













  Thanks to  FB :  Sundar Iyer   --  மஹாபெரியவா - (Sharing Message)

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்







சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்
இன்றைக்கும் வைதீக ச்ரத்தை அடியோடு போய்விடாத
பெருமை இருக்கிறது. பலவித தர்மங்கள் தலைவிரித்தாடிய
சமயத்தில் வேத தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காகவே
அவதாரம் செய்ய நினைத்த பரமேஸ்வரன் இருப்பதற்குள் 
எங்கே வேத அத்யயனம் ,அனுஷ்டானமும் நிறைய இருக்கிறது
என்று தேடிப் பார்த்து கேரளத்தில் ,காலடியில் ஒரு நம்பூதிரி
குடும்பத்தில் அவதாரம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது.
அவர் காலத்தில் மலையாள மொழியே தோன்றியிருக்கவில்லை.

தமிழ் மொழிதான் அங்கும் இருந்தது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்
அத்யந்த ஸகாவான சேரன் பெருமான் நாயனார் காலத்தில் கூட
கேரளம் தமிழ் பேசின சீமையாகத்தான் இருந்திருக்கிறது. அவர்
தமிழில்தான் திருக்கைலாய உலா என்ற க்ரந்த்தை பாடியிருக்கிறார்.
அவர் மலையாள தேசத்திலுள்ள திருவஞ்சைக் களத்தில் இருந்து
கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தவர்.


'திவ்ய ப்ரபந்தத்தில்'பெருமாள் திருமொழி' என்ற பெயரிலுள்ள
பாசுரங்களைச் செய்த குலசேகர ஆழ்வாரும், திருவனந்தபுரத்திலிருந்து
ஆட்சி செய்தவர்தாம். அப்போதும் அங்கு தமிழ்தான் இருந்திருக்கிறது.
இதற்கெல்லாம் முந்தி, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஈஸ்வரனே
சங்கரராக அவதாரம் செய்தபோது, கேரளம் தமிழ் நாட்டுப் பகுதியில்
தான் இருந்திருக்கிறது . வேதம் ரொம்பவும் ஜீவனோடு இருந்தது
என்பதால் தான் அவர் அங்கு அவதரித்தார் என்பதிலிருந்து தமிழ்
தேசத்துக்கு வேதத்தில் விசேஷ பற்றுதல் இருந்தது தெரிகிறது.











பெரியவாளின் அருளுரை.

ஜய ஜய சங்கரா....

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks for Adisankara bhaktas for the photos and also 
Mahaperiyava bhaktas for the scanned photos.

Friday, April 10, 2015

நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",









அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்",

(கருணையின் வடிவமே!)

ஏப்ரல் 29,,2014-தினமலர்.

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க,

பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, ""வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர், அவரை நிறுத்தி, ""அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார்.
அவரும் விசாரித்து வந்தார்.

""சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,'' என்றார்.

""ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு

நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

""எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, ""அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார்.

அய்யர் அலறாத குறை தான். ""பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.






thanks  :  ஏப்ரல் 29,,2014-தினமலர்.


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Thursday, April 9, 2015

உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் - நன்றி - சந்தானம் T ராமனாதன்


 சந்தானம் T ராமனாதன்  அவர்களின் -
உத்தராஞ்சல் மாநிலத்தின் அனுபவம் 
நன்றி -  Facebook








2007 ல் ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே முடியாத அதிசயம் இது. .சரய நதியும், ராம்கங்கா நதியும் ஓடும் இந்த இடத்தில்தான் உலகிலேயே மிக மிக அதிசயமான, பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில் சொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களும் தெய்வங்களும் இங்கே சுயம்புவாய் காட்சியளிக்கின்றன என்பதுதான் இதன் அதிசயம். உலகின் ஏழு பாதாள அதிசயங்களில் இதுவும் ஒன்று. அல்மோராவில் கங்கோலிஹட் என்ற இடத்திலிருந்து 14 km தொலைவில் உள்ளது.

நான்தான் இறங்குவதற்கு முன்னால் ஒரு போஸ்

இது காளமேகம்
திரேதா யுகத்தில்தான் இது முதன் முதலில் கண்டுடிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியை ஆண்ட ரிதுபர்ணன் என்ற மன்னன் ஒரு நாள் ஒரு மானைத்துரத்திக் கொண்டு செல்ல, இந்த குகைக்கருகில் வந்ததும் மான் மறைந்து விட, மன்னன் அந்த குகையைக்கண்டு அதனுள் இறங்கிப் பார்த்திருக்கிறான். பூமிக்கடியில் ஆதிசேஷன் எழுப்பிய சுவர்க்கம் இது என அறிகிறான். அறிந்த ரகசியத்தை வெளியில் சொல்லாதே என எச்சரிக்கிறது ஆதிசேஷன். ஆனால் அவன் மனைவியிடம் சொல்ல, மரணம் அவனை கொண்டு செல்கிறது. அவன் மனைவி குகைக்கு வருகிறாள், அதற்குள் இறங்குகிறாள். அவளும் ரகசியம் அறிகிறாள்.
இறங்கும் வழி

திரேதா யுகத்திற்குப்பின், துவாபர யுகத்தில் பாண்டவர்கள் இதனுள் நுழைத்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு வழி மூலம்தான் அவர்கள் சுவர்க்க ரோகினிக்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கலியுகத்தில் ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார். . அங்கே உள்ள சுயம்பு லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்) பூஜித்து அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது. இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக பூஜிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார். 1941 ல் சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

ஆதிசங்கரர் பூஜித்த லிங்கங்கள்

அதன் பிறகு எழுபதுகளில் ராணுவ அதிகாரி ஜெனரல் டெயிலர் என்பவரின் கனவில் சத்திய சாயி பாபா தோன்றி அவருக்கு ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவர் தன பணி நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன் கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான இடமாயிற்று. குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனுள் அப்படி என்னதான் அதிசயங்கள் இருக்கின்றன? 

உண்மையிலேயே அதிசயங்கள்தான். பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன், கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு (இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்), தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு, அதிலிருந்து உமிழ் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் கபால மாலைகளோடு சிவனின் இருப்பு,கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, இந்த அன்னப்பறவை, நாகங்களிடமிருந்து தண்ணீரைக் காக்க பிரும்மாவால் நியமிக்கப்பட்டது. ஆனால் இது தன கடமைச் சரியாகச் செய்யாததால் பிரும்மா இதன் கழுத்தை திரும்பியிருக்குமாறு சபித்து விட்டாராம். ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும், பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன் பார்வதி, சிவனின் கமண்டலம், சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர், கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை, தலை வெட்டப்பட்ட கணபதி, உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை சொட்டும் அஷ்ட தள தாமரை, என அத்தனையும் இங்கே சுயம்புவாய் உருவாகியிருக்கிறது. மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.

ஆதிசேஷன்
பிரும்ம தீர்த்தம். அருகில் நந்தி
தலை வெட்டப்பட்ட கணேஷா மேலே அஷ்ட இதழ் தாமரை
கேதார், பத்ரி, அமர்நாத்
சிவனின் கமண்டலம்
பஞ்ச பாண்டவர்களுடன் சிவன் பார்வதி
ஐராவதத்தின் கால்கள்
ஐராவதத்தின் முகப் பகுதி
முகம் திரும்பியிருக்கும் அன்னப்பறவை
இவற்றை கற்பாறைகளில் ஏற்பட்ட தோற்றம் என நம்பவே முடியாது. மென்மையான சதை ரூபம் காண்பது போல் தத்ரூபமாய்த் தெரியும். கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும் பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை. இந்த லிங்கங்களுக்கு நாங்கள் கொண்டு சென்ற மானசரோவர் தீர்த்தால் அபிஷேகித்து, வில்வம் சார்த்தி பூஜித்தோம்.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த கதையைசொல்வது போல் சிவனின் ஜடையிலிருந்து வடியும் கங்கை அதனடியில் பகீரதனின் உருவம் அதற்கருகில் சிறிய குளம் போல் பிரும்ம தீர்த்தம், அதனருகே உள்ள நந்தி, முப்பத்து முக்கோடி தேவ ரூபங்கள். என்று அத்தனையும் இயற்கையாய் உருவாகியிருக்கிறது. இந்திர லோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.

சிவனின் ஜடை

பாரிஜாத மரம்

ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும் மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கம் ஒன்றிருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது குகையின் உச்சியைத்தொடுகிறது அப்போது கலியுகம் முடிந்து விடுமாம். இதன் பினால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். ஆக மொத்தம் ஒரு மினியேச்சர் தெய்வ ரூபங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் பாதாள அதிசயம் இது. (புகைப்படங்களைப் பாருங்கள் நிச்சயம் உங்கள் விழிகள் விரியும்)

கலி லிங்கம்
இந்த பாதாள குகை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் நூறடிகள் வரை உள்ளே இருக்கிறது. மேலிருந்து செங்குத்தாய் ஒரு பள்ளம், அதில் குறுகிய பாதை அதன் இரண்டு பக்கமும் நம் பிடிப்புக்காக கட்டப் பட்ட இரும்புச் சங்கிலிகள் இதனைப் பற்றிக்கொண்டு அமர்ந்த நிலையில்தான் நிதானமாக உள்ளே இறங்க வேண்டும். நம் காலுக்கு கீழே பாறைக் கற்களைக் கொண்டு ஒரு சரிவு அமைக்கப் பட்டிருக்கும். இதில் இறங்குவதே ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறடி இறங்கி விட்டோம் எனில் பாதை பிரியும் இடத்தில் நரசிம்ம மூர்த்தியின் பாதங்கள் பதிந்திருப்பதைக் காணலாம். பின்னர் விஸ்தாரமான பெரிய குகை. குளுமையோ குளுமை. உள்ளே ஜெனரேட்டர் உதவியோடு எரியும் மங்கிய மின் விளக்குகளின் ஒளியில் அந்த அதிசயங்களைப் பார்க்கும் போது மனசு சிலிர்க்கும், திரேதா யுகத்திலிருந்து இருக்கும் இந்த அதிசய குகையில், பாண்டவர்கள் கால் பதித்த, ஆதிசங்கரர் தவம் செய்த, புண்ணிய இடத்தில் நாமும் கால் பதித்திருக்கிறோம் என்ற சிலிர்ப்பு நம் கண்களில் ஜலப்பிரவாகத்தை வெளிப்படுத்தும்.

குகையின் தரைப்பகுதி முழுவதும் வளைந்து நெளிந்து தன் வயிற்றுப்பகுதியின் தடங்களோடு சிலந்தி வலையாய் பரவிச் செல்லும் ஆதிசேஷனின் உடற்பகுதி அதிசயத்தின் உச்சம். சர்ப்ப வேட்டையில் இறங்கியிருந்த ஜனமேயஜயனிடமிருந்து தப்பித்த ஆதிசேஷன் இங்கே வந்து மறைந்திருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த ஆதிசேஷனே இந்த பாதாலத்திளிருந்தபடி பூமியைத் தன தலையில் சுமப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனுள் நான்கு சுரங்கப் பாதைகளுக்கான கதவுகள் உள்ளது. இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. முதல் கதவு பாவப்பாதை. ராவண வதத்திற்க்குப்பின் இது மூடப்பட்டு விட்டது. அடுத்தது ரணப்பாதை (way to war) இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது. ஒன்று தர்மப்பாதை. இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும். மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும் மோட்சப்பாதை. இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம். இந்தப் பாதை அடுத்த யுகமான சத்ய யுகத்தில் மூடப்பட்டு விடுமென ஸ்கந்த புராணத்தின் மானஸ்கந்தம் சொல்கிறது. இந்த குகைக்குள் இருக்கும் ஒரு சிறிய குகையில்தான் மார்க்கண்டேய மக்கரிஷி மார்க்கண்டேய புராணம் இயற்றியிருக்கிறார்.

காலபைரவரின் நாக்கு. பின்னால் மோட்சப் பாதை
எனக்கு இந்த குகையும் இந்த அதிசயங்களும் மற்றொரு சிந்தனையை ஏற்படுத்துகிறது. நம் மனம் கூட இப்படி ஒரு பாதாளத்தில் உள்ள இருண்ட குகைதானோ? அதனுள் பயணிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா? 

ஒருவேளை முயற்சித்தால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நமக்கு தரிசனம் கொடுக்க நம் மனக்குகையிலும் காத்திருக்குமோ?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானற்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
என்று சும்மாவா சொன்னார் திருமூலர்?
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்
உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
இதுவும் அவர் பாடியதுதான். உத்தமன் உள்ளேதான் இருக்கிறான். அங்கேயும் தேடிக் கண்டறிவோம.


















Facebookil kanda arumaiyanaa padivu  nandri  Santhanam  T Ramanathan


Thanks   Santhanam  T Ramanathan for the wonderful unbeleivable photos 

Thursday, April 2, 2015

"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்"






"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். 
விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்"

கல்கியில் வந்த அருள்வாக்கு.

நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.

எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விடுகிறது. ‘எல்லாம் கனவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய் மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.

விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சோப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப்பிராயத்துக் குழந்தைகள் அம்மா - அப்பா, தாத்தா - பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவை தானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?" என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிற தோல்வியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?

‘மாயக்கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்ட தோல்லியோ?

அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சோவின் -- "சந்நியாசியான தாத்தா". -








ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின் 
கட்டுரையில் ஒரு சில துளிகள்

சோவின்  

"சந்நியாசியான தாத்தா"

என்னுடைய தந்தை வழிப்பாட்டனார் ராமநாத அய்யர்.
அவர் ஒரு அட்வகேட்.'லா லெக்சிகன்' என்று ஒரு
சட்ட அகராதியை எழுதியவர்.

செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பினாயூர்தான்
எங்களுடைய ஊர். பெரிய நிலச்சுவாந்தர். வீடுகளும் பல.

உடம்பின் மேலே சட்டை போட்டுக் கொள்வதை
இடையில் விட்டுவிட்டார். 'நார்மடி' என்று சொல்வார்கள்.
அப்படித்தான் வேட்டி கட்டுவார். வீட்டில் யாருக்காவது
உடல் நலம் சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்குப்போவது
அவருக்குப் பிடிக்காது. அவரே ராம ஜெபம் பண்ணுவார்.
அதில் குணமாகும் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும்.
அதை மீறி டாக்டரிடம் போனது தெரிந்தால் கோபப்படுவார்.
அதனால் டாக்டரைப் பார்க்கப்போனால் வீட்டில்
அவருக்குத் தெரியாமல்தான் போவார்கள்.

திருப்பதிக்குப் போனால் சென்னையிலிருந்து நடந்தே
போவார். எந்தப் படாடோபமும் அவருக்குப் பிடிக்காது.
நான் சிறு குழந்தையாக இருந்த போது- அப்போது
வெல்வெட் துணியில் என்னைப் படுக்க
வைத்திருக்கிறார்கள்.அப்போது வெல்வெட்டின் விலை
அதிகம்.[இது பிடிக்காமல் முண்டகக் கண்ணியம்மன்
கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்]

இப்படி இருந்த அவருக்கு ஒரு நாள் சந்நியாசம்
வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்து
விட்டது. காஞ்சிப் பெரியவர் மஹாஸ்வாமிகளிடம்
அனுமதி கேட்டார்.அனுமதி கொடுத்ததும் சந்நியாசம்
வாங்கிவிட்டார். எல்லாச் சொத்தையும் மகன்களுக்குப்
பிரித்துக் கொடுத்துவிட்டு காஞ்சி மடத்திலேயே
தங்கிவிட்டார்.



                          




Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?” - மஹா பெரியவா










                                                            மஹா பெரியவா 



பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை.பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போதுஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டுஇளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும்“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாகவெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா?நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒருசிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும்,வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக்கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கைஅங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம்செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா”வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால்நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்குஅவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான்,என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்கஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகைவாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக,வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவர்







               

                                                                       மஹா பெரியவா 
                 
                                                                   மஹா பெரியவா 




Courtesy  :  Facebook  : Well-bred Kannan
Thanks to Mahaperiyava bhaktas for the photos.