Wednesday, May 6, 2015

"தேசியமும் தெய்வீகமும்"


         "தேசியமும் தெய்வீகமும்"

மகாபெரியவர் ஒருசமயம் மேற்கு வங்காள மாநிலம், மித்னாபூருக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு வந்த தகவல், சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் எல்லாருமே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். 


தேசபக்தியுடன் இந்து மத உணர்வும் அவர்கள் ரத்தத்தில் கலந்திருந்தது. அவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்களும் இருந்தனர். தேசத்தின் நலனைப் பெரிதெனக் கருதி, சிறைக்கம்பிகளுக்குள் சிக்குண்டு போனவர்கள்.

அவர்களில் பலருக்கு ஸ்ரீசுவாமிகளை எப்படியாவது தரிசித்து விடவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அவர்கள் சிறை அதிகாரியைச் சந்தித்து, ""நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மகாசுவாமிகளைத் தரிசிக்க விரும்புகிறோம். நீங்கள் என்ன நிபந்தனை விதித்தாலும், அதற்கு கட்டுப்படுகிறோம். எங்களை வெளியே அனுப்ப வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரியும் சில நிபந்தனைகளை விதித்து, மாலை ஆறுமணிக்குள் நிச்சயம் ஜெயிலுக்கு வந்து விட வேண்டும் எனக்கூறி அனுமதி வழங்கினார். எல்லாக் கைதிகளும் அவரிடம் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து, மகாசுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அதற்கே மாலை 5.30 மணி ஆகி விட்டது. சுவாமிகள், அப்போது தான் நித்ய பூஜையை முடித்து விட்டு, சிறிது ஓய்வு எடுப்பதற்காக, ஒரு தனி இடத்திற்குச் சென்றிருந்தார்.

கைதிகள் எல்லாரும் மடத்து ஊழியர்களிடம் தாங்கள் அவசரமாக ஜெயிலுக்குத் திரும்ப வேண்டும் என்பதால், சுவாமியை உடனே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்கள். ஊழியர்களும், ""இன்னும் பத்து நிமிடம் மட்டும் பொறுங்கள். சுவாமி தரிசனம் தந்து விடுவார்,'' என உறுதியளித்தனர்.

ஆனால் கைதிகளோ""ஐயா! நாங்கள் ஆறு மணிக்குள் சிறைக்கு செல்லா விட்டால், அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியிருக்கும். அப்படி நாங்கள் உயிர்விடவும் அஞ்சவில்லை. ஆனால், ஆறு மணி வரை சுவாமிகள் வராவிட்டால், அவரது தரிசனம் கிடைக்காமலேயே இறந்து போவோமே என்று தான் வருந்துகிறோம்,'' என்று உருக்கமாகக் வேண்டுகோள் வைத்தார்கள். 

இதற்குள் நேரம் ஆறுமணியை நெருங்கி விட்டது. கைதிகள் வருத்தத்துடன் சிறை நோக்கி நகர்ந்தார்கள். அப்போது, சுவாமிகள் வெளியே வந்து ஊழியர்களிடம், ""தரிசனத்துக்கு யாராவது வந்தார்களா?'' என்று கேட்டார்கள். கைதிகள் சிலர் வந்து இப்போது தான் போகிறார்கள் என்ற தகவலை ஊழியர்கள் சொன்னார்கள்.

அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று ஊழியர்களை அவசரப்படுத்தினார் மகாசுவாமி. ஊழியர்களும் ஓடிச்சென்று அவர்களை அழைத்து வந்தனர். எல்லாரும் சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். 

இனி உயிரே போனாலும் பரவாயில்லை என்ற பெருமித உணர்வு அவர்களின் முகங்களில் தெரிந்தது.

அவர்கள் சுவாமியிடம், ""இந்த தேசம் அந்நியர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் சிரமப்படுகிறார்கள். நாடு சுதந்திரம் அடைய சுவாமிகள் அனுக்கிரஹம் புரிய வேண்டும்,'' என்று வேண்டினார்கள். பிறகு சுவாமியிடம் உத்தரவு பெற்று சிறைக்குத் திரும்பினார்கள். 

அந்தக் கைதிகள் தங்களுக்காக சுயநலமுள்ள கோரிக்கைகளை வைக்காமல், தேசத்தின் நலனுக்காக கோரிக்கை வைத்தது கண்ட மகாசுவாமிகள் மகிழ்ந்தார்.










ன்றி : தினமலர்  --  ஜனவரி 06,2015,



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"மாண்டவர் மீண்டால்?"


              "மாண்டவர் மீண்டால்?"





சொன்னவர்-சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீபரமேசுவரன் ஆதிசங்கரராக அவதாரம் செய்து,
வேதம்,வேதாந்தம்,வைதீகதர்மம் முதலியவற்றை
அக்காலத்தில் ரட்சித்ததை சங்கர சரித்திரங்கள்
கூறுகின்றன.

ஆனால் நமது காஞ்சி பீடாதிபதிகள் ஸ்ரீசந்திர
சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில்
பார்த்தவர்கள், ஆதிசங்கரரின் சரித்திரத்தை
நன்கு படித்தவர்களாக இருந்தால், அந்த ஆதிசங்கரரே
இவர் என்று நிச்சயித்துவிடுவார்கள்.

தீட்சிதர் கூறும் ஓர் அனுபவம் கீழே;

"சில வருடங்களுக்கு முன் சுக்ர வாரத்தன்று பக்தர்கள்
பூஜை செய்துவிட்டு எழுந்து நின்றார்கள்.ஆயிரக்
கணக்கான சுமங்கலிகள் அங்கே கூடி இருந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஒரு ஸ்திரீ நெற்றியில் குங்குமம்
இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

அந்த அம்மாளை ஸ்ரீஆச்சாரியாள், சந்நிதிக்கு வரும்படி
ஜாடை காட்டி அழைத்தார்கள். ஆனால் அந்த அம்மாள்
வராமல், கண்ணீர் உகுத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் அழைத்து அவளை நமஸ்காரம் செய்து கொள்ள
அனுமதித்தார் சுவாமிகள்.

"ஏன் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவில்லை?"
என்று கேட்டார்கள்.

தன் கணவன் யுத்தத்தில் இறந்துவிட்டதாகப் பேப்பரில்
மூன்று முறை செய்திகள் வந்து ஆறுமாதங்கள் 
ஆகிவிட்டதாகவும், இனி கர்மாக்களை எப்படிச்
செய்யவேண்டும் என்பதைச் சுவாமிகளிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளவே, தரிசனத்துக்கு வந்திருப்பதாகவும்
கதறிக் கூறினாள் அந்தப் பெண்மணி.

உடனே ஆச்சாரியாள் கை நிறையக் குங்குமத்தை அள்ளி
எடுத்து அந்த அம்மாள் கையில் கொடுத்து
"வருத்தப்படாதே! உன் கணவன் உயிருடன்தான் இருக்கிறான்.
கூடிய சீக்கிரம் வந்து சேருவான்!" எனக் கூறினார்.

அதுபோலவே அடுத்தவாரமே அந்த அம்மாளின் கணவன்
வந்து சேர்ந்துவிட்டான்.!

அவர்கள் குடும்பத்துடன் வந்து ஆச்சாரியாளைத் தரிசித்து
நமஸ்கரித்துவிட்டுப் போனார்கள். அப்போது அந்தக்
குடும்பம் அடைந்த ஆனந்தத்தை எப்படி விவரிப்பது.?"














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

வித்தை காட்டி பிழைச்சுக்கோ!

                 வித்தை காட்டி பிழைச்சுக்கோ!














"வித்தைக்காரன் குரங்கை ஆட்டுறதைப் போல என்னை படுத்துறியே?' என்று பிறரால் மனம் புண்படும்போது வருத்தத்தில் சொல்வார்கள்.

ஆனால், அருளாளர் ஒருவர் இறைவனிடம், "குரங்காட்டி போல என்னை வைச்சுப் பிழைப்பு நடத்திக்கோ!' என்று மனம் உவந்து சொல்கிறார். அவர் வேறு யாருமல்ல! காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் தான்.

""பரமேஸ்வரா! வெறுமனே கையில் கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறாயே! என் குரங்கு மனசை பக்தி என்னும் கயிற்றால் கட்டி உன் கையில் பிடித்துக் கொள். நான் உன்னை தொடர்ந்து வருகிறேன். குரங்காட்டி போல என்னை வைத்து வித்தை காட்டி பிழைத்துக் கொள். இதனால், உனக்கும் பிழைப்பு நடக்கும். நானும் பிழைத்துக் கொள்வேன்!'' என்று வேடிக்கையாக வேண்டுகிறார். 

குரங்கு இங்குமங்கும் தாவுவது போல, மனமும் எப்போதும் ஆசைவயப்பட்டு தாவியபடி இருக்கும். ஆனால், வித்தைக்காரனான குரங்காட்டியிடம் குரங்கு கட்டளைக்கு கீழ்ப்படிவது போல, மனம் இறைவனின் வசமாகி விட்டால், அவரையன்றி வேறு எதையும் சிந்திக்காது என்பதைச் சங்கரர் இவ்வாறு உணர்த்துகிறார்.










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Tuesday, May 5, 2015

கடல் கடந்து போவது…

                        கடல் கடந்து போவது…











பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!



ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை

முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திருரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால் சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்குநிதர்சனமாக தெரிந்திருந்தது. 

ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்

தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே 

கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து  கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை நீட்டிவிட்டார்…….


பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! 

ரா.கணபதிக்கோ   நிம்மதி பெருமூச்சு!


“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”


சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும்!




                


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு

"மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம்"(பந்தா' பாகவதர்)












ஜூன் 11,2014,தினமலர்.

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!

கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார்

. போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து "ஜால்ராக்களையும்' அழைத்து வந்திருந்தார்

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி. 

பேச்சின் இடையே அவ்வப்போது, "ம்ஹும்...ம்ஹும்...' என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் 
கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, "பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்... பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார். 

""பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்.... ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை 
தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல.... ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ....'' என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார். 

இதைக் கண்ட பெரியவர், ""மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,'' என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.







நன்றி : தினமலர்.
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"கட்டெறும்பிடமும் கருணை"









     "கட்டெறும்பிடமும் கருணை"

பிப்ரவரி 05,2014,தினமலர்.

சந்நியாசியாக இருப்பவர் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் பல உண்டு. அவற்றை நெறி பிறழாமல் முறையாக பின்பற்றியவர் காஞ்சிப்பெரியவர். குறிப்பாக சந்நியாசிக்கு உரியது ஜீவகாருண்யம். அதாவது எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது. இதை பெரியவர் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்

காஞ்சிப்பெரியவர் தினமும் 21 முறை கைகால்களைச் சுத்தம் செய்து, ஜபம் செய்வார். ஒருநாள், மடத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து கை, கால்களைச் சுத்தம் செய்ய வந்தார். நீரில், கட்டெறும்பு ஒன்று மிதப்பதைக் கண்டார். உடனே தன் சிஷ்யர் சிம்சன் வைத்தாவை அழைத்து, ஒரு குச்சியினால் அதை எடுத்து தரையில் போடச் சொன்னார். அப்போது கட்டெறும்பு இறந்து விட்டது.

கிணற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு, கை,கால்களைச் சுத்தம் செய்த பின், ஜபம் செய்யத் தொடங்கினார். அதைக் கண்ட வைத்தா பெரியவரிடம், ""பெரியவா! ஏன் இப்போது ஜபம் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார். 

அதற்கு பெரியவர், ""டேய்! இந்த கட்டெறும்பு முக்தி அடைந்து விட்டது. அது எவ்வளவு நேரம் தண்ணீரில் தத்தளித்ததோ தெரியாது. அதற்கு மோட்சம் கிடைக்க வேண்டாமா? அதற்காக, ஸ்ரீமந்நாராயணனை நோக்கி ஜபம் செய்தேன். உலக ஜீவராசிகள் அனைத்தும் மோட்சம் பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்,'' என்றார். எறும்பை அடக்கம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.

இப்படி ஒரு எளிய ஜீவராசியிடம் கூட அன்பு காட்டிய காஞ்சிப்பெரியவரின் கருணையை என்னவென்று சொல்வது!





 




நன்றி : தினமலர்.

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."










வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள
தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."

(நெஞ்சம் மறப்பதில்லை)

எஸ்.ராமசுப்பிரமணியன்

ஏப்ரல் 02,2014,தினமலர்



அது, 1965ம் ஆண்டு! சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெருவில் வசித்துக் கொண்டிருந்தோம். நான், இந்து உயர்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழு ஆண்டுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மறுநாள் மதியம், "சயின்ஸ்' பரீட்சை. படிக்காமல் பிள்ளைகளோடு பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன்

வெளியே எங்கேயோ போயிருந்த அப்பா, திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஆட்டத்திலிருந்து அம்பேல் ஆகி, மின்னலாய் வீட்டுக்குள் நுழைந்து, விஞ்ஞான புத்தகத்தை பிரித்து அமர்ந்தேன். உள்ளே நுழைந்த அப்பா, "டேய் கிளம்புடா...'என்றார்.

என் வயிற்றில் பந்தாய் பயம் உருண்டது. 

அப்போதெல்லாம் அப்பாவுடனோ, அம்மாவுடனோ வெளியே செல்ல வேண்டுமென்றால், கதிகலங்கும். நடத்தித்தான் அழைத்து செல்வர்.
காரணம்: அப்பா செல்வாக்கோடு வீட்டில், "பெட்டி நிறைய பணம் வைத்துக் கொண்டு புழங்கியிருந்த போது நான் பிறந்திருக்கவில்லை. நான் பிறந்த பின், வீட்டில் பெட்டியே இருக்கவில்லை. 

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்தபோது, எழும்பூருக்கு கூட டாக்சியில் செல்லும் வழக்கமுடைய அப்பா, திருவல்லிக்கேணியில் இருந்து அடையாறுக்கும், மாம்பலத்திற்கும் கூட நடந்தே சென்று திரும்புவது உண்டு. அந்த நேரத்தில் பஸ் பயணம் என்பது, எங்களுக்கு பிரமிப்பூட்டும் விஷயம்
.
சாதாரண சாயாக்கடை வைத்து படிப்படியாய் முன்னேறி, ஸ்டார் ஓட்டல் வைத்தவர்கள் வரலாற்றை வாசித்து இருக்கிறேன். ஒன்றன் பின், ஒன்பது ஓட்டல்கள் வைத்தும் உருப்படாமல் ஓட்டாண்டியான, அப்பாவின் வரலாற்றை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன். அப்பாவின் ஓட்டல்களில், காசு கொடுத்து சாப்பிட்டு போனவர்களை விட, ஓசியில் சாப்பிட்டு போனவர்களே அதிகம்.

அப்பா, "டேய் கிளம்புடா...'என்றதும் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, "எங்கே?' என்று தைரியமாக கேட்டுவிட்டேன். ஆனாலும், உதறலெடுத்துக் கொண்டுதான் இருந்தது. அப்பா என்னை உக்கிரப்பார்வை பார்த்தார். "போற எடம் தெரியலேன்னா வரமாட்டியோ?' என்று கோபமாகக் கேட்டார். அவரது பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல், "இல்லை... பரீட்சை... 
படிக்கணும்...'என்று இழுத்தேன். "நீ பரீட்சைக்கு படிச்சுண்டிருந்த லட்சணத்தை பார்த்துண்டுதானே வந்தேன். கிளம்புடான்னா...' என்று ஒரு அதட்டல் போட்டார்.

பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். நாற்பத்தைந்து நிமிட நடையில் நாங்கள் எழும்பூர் ஹால்ஸ் சாலையை எட்டி இருந்தோம். பேபி ஆஸ்பிடலுக்கு எதிரிலிருந்த, "மினர்வா டுடோரியல்ஸ்' வளாகத்துக்குள் நுழைந்த போதுதான், காஞ்சி மாமுனிவர், பெரியவர், பரமாச்சாரியர், ஜகத்குரு ஸ்ரீசந்திரகேகர சரஸ்வதி சுவாமிகள், அங்கு முகாமிட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது.

என் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு பிரவகிக்க ஆரம்பித்தது. உற்சாகத்திற்கு காரணம் பெரியவாளை தரிசித்தால், அவரிடம், ஆசி பெற்றுக் கொள்வதோடு, அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். ஓட்டல் நடத்தி, வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓசியிலேயே சாப்பாடு போட்டு அனுப்பிய அப்பா , எனக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது திருப்தியாய் சாப்பிட வைப்போம் என்று, வியர்க்க விறுவிறுக்க, வெயிலில் நடத்தி அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் மனசு கனத்துப்போகிறது.

அப்பா தோளிலிருந்த துண்டை எடுத்துக் இடுப்புக்குக் கொடுத்தார். நானும் சட்டையை அவிழ்த்து இடுப்பில் சுற்றிக் கொண்டேன். 
அப்பாவும், நானும் சுவாமிகள் அருள் பாலித்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.

பரமாச்சாரியார் அப்பாவை பார்த்தார். அடியேனையும் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டு, ஒரு நிமிடம் தியானித்தார்.
சன்னிதானத்தின் முன் கைக்கட்டி நின்றிருந்த போதிலும், சமையலறையிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்த நறுமணம், என் நாசியை தாக்கி, வசீகரித்து அழைத்துக் கொண்டிருந்தது.

பெரியவாள் கண்களை திறந்து அப்பாவைப் பார்த்தார்."பிள்ளையாண்டனுக்கு இன்னும் பிரம்மோபதேசம் செய்யலியா?' என்று கேட்டார்.

"இன்னும் வேளை வரவில்லை...' என்றார் அப்பா தயக்கத்தோடு!

"வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெருமடத்துல போய் போட்டுடுங்கோ...' என்று திருவாய் திறந்து உத்தரவிட்டார். அப்பா என்னை அழைத்துக்கொண்டு, அடுத்த அறையிலிருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜரை அணுகினார்.

எனக்கு "உபநயனம் (பூணூல்) செய்து வைப்பது குறித்து அப்பா ஐந்தாண்டுதிட்டமே தயாரித்து வைத்திருந்தார். அப்பா இருந்த நிலையில், அவரது பிளானை ராத்திரி கனவில் மட்டுமே நிறைவேற்றி வைக்கமுடியும்! ஆனாலும், அப்பா, மேனேஜரிடம், தன் ஆதங்கத்தையும், பெரியவர்களின் ஆசியை ஏற்று, மறுநாள் பிரம்மோபதேசம் செய்து, தன் தன்மானம் தடுப்பதையும் எடுத்துரைத்தார். கூட நாளை நான் பரீட்சை எழுத வேண்டியிருப்பதையும் கூறினார். "பரீட்சை எப்போ?' என்று கேட்டார் 

மேனேஜர் என்னிடம். நான் மத்தியானம் இரண்டு மணிக்கு என்றேன், பெரியவா சொன்னா, அதுல விஷயம் இருக்கும். பையனைப் பரீட்சை எழுத வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க வீணா விவாதம் பண்ணிண்டு இருக்காம, சாயரட்சை குடும்பத்தோட மடத்துக்கு வந்து சேர்ந்துடுங்கோ, என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதற்கு மேல், அவரிடமும் எதுவும் பேச முடியவில்லை.

மறுநாள் திங்கட்கிழமை. அப்பா அம்மா நான் ஆகிய மூன்றே பேர்களோடு, நான்காம் பேருக்குத் தெரியாமல், மயிலாப்பூர் சித்திரைக் குளத்தெரு, சங்கர மடத்தில் பரமாச்சாரியாரின் அருளோடும், சகல வைதீக சடங்குகளோடும், எனக்கு பிரம்மோபதேசம் நடந்து முடிந்தது. மதியம் நான், பரீட்சைக்கு எழுத பள்ளிக்கூடம் போக மடத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்து தந்தனர்.

பரீட்சை எழுதி திரும்பி வந்த என்னையும், என்னோடு உபநயனம் நடந்த ஐந்து பேரையும், "புரசைவாக்கம் தர்மபிரகாஷ்' திருமண மண்டபத்தில் முகாமிட்டிருந்த பரமாச்சாரியாரிடம் அழைத்துச் சென்றனர்.

உடன் வந்திருந்த ஸ்ரீமடத்து சாஸ்திரிகள், "அபிவாதயே...' என்று துவங்கும் நமஸ்கார மந்திரம் சொல்லித்தர, நாங்கள் அறுவரும் அதைத் திருப்பிச் சொல்லி, சுவாமிகளை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினோம்.

மந்திரத்தின் கடைசி வாரிசுகளான, "ராமசுப்ரமணிய சர்மா அஸ்மீபோஹோ' என்பதைச் சொல்லிவிட்டு, ஆறு பேருக்கும் நடுநாயகமாக நின்றிருந்த நான், எனக்கு மிகச் சரியாக எதிரிலிருந்த பரமாச்சாரியாரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டேன்.

பாதங்களில் ஸ்பரிசம் பட்டதும், பரமாச்சாரியாரின் தேகம் சட்டென்று சிலிர்த்தது. வணங்கி எழுந்த என் தலையில், "நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன்.......அப்பா! அப்பா என்னை குட்டியதை சுவாமிகள் பார்த்துவிட்டார். "குழந்தையை வையாதீங்கோ, தெரியாம தொட்டுடுத்து...' என்றபடி என்னை அழைத்து அருகே அமர்த்தி குட்டுப்பட்ட இடத்தில், தன் பட்டுக்கரங்களால் தொட்டுத் தடவி ஆசிர்வதித்து வழியனுப்பிவைத்தார். அடுத்த பதினைந்தாவது மாதம், அப்பா செத்துப்போனார். அப்பாவை தகனம் செய்துவிட்டு திரும்பிய அன்று, அம்மா என்னை அருகே அழைத்தார். என் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த பூணூலை தொட்டுப் பார்த்தார். "உனக்கு பிரம்மோபதேசம் ' நடந்ததுக்கு மொதநாள் பெரியாவளைப் பார்க்க போய் இருந்தியே... அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லு...' என்றார். நான் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னேன்.

அப்பாவின் அத்தியாயம் அஸ்தமிக்கப் போறதுன்னு உனக்கும், எனக்கும் தாண்டா தெரியலை. பராமாச்சாரியரோட ஞானதிருஷ்டியில், ஒண்ணேகால் வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சிருக்குடா...' என்று சொல்லி, அழ ஆரம்பித்தார்

நான் புரியாமல், அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா அழுகையை நிறுத்திவிட்டு தொடர்ந்து சொன்னார்...

"வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு கர்மம் செய்ய வேண்டிய வேளை வந்தாச்சுன்னு அர்த்தம்டா. அன்னிக்கு மட்டும் பெரியவா பிடிவாதமா உனக்கு, "பிரம்மோபதேசம்' செய்து வெக்கலேன்னா, உனக்கு உபநயனம் முறையா நடக்காமயே போயிருக்கும். இன்னிக்கு உங்கப்பாவை நீ தகனம் செய்றதுக்கு முன்னால சுடுகாட்டுலேயே, "காட்டுப்பூணல்' போட்டு வெச்சிருப்பா. காலத்துக்கும், உன் உடம்புல அந்த காட்டுப் பூணல் தான் ஊஞ்சலாடிண்டு இருந்திருக்கும்...' என்று அம்மா விவரமாக விளக்கிய போது, மெய்சிலிர்த்தது எனக்கு. நடமாடும் தெய்வமாய் இருந்து, அருளாசி வழங்கிக் கொண்டிருந்த பரமாச்சாரியாரின் ஞான திருஷ்டியை, இப்போது நினைத்துப் பார்த்தாலும் புல்லரிக்கிறது மனது!

எஸ்.ராமசுப்பிரமணியன்











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.
ன்றி  : தினமலர்