Wednesday, June 17, 2015

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார்.


“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார்.

 




எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்."

ரா.கணபதி 

மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.



சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆஞ்ஜநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

சபரிமலை சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர ஆரம்பித்தார்கள். பெரியவா முன்னால் சரண கோஷம் செய்து


 சபரிமலை சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர 

ஆரம்பித்தார்கள். பெரியவா முன்னால் சரண 


கோஷம் செய்து 









சாமியே சரணம் ஐயப்பா....

சபரிமலை பக்தர்கள் இரண்டு பேருந்துகளில் வந்தார்கள். அவர்களிடம் ''எந்தெந்த ஊர்களுக்குப் போனீர்கள், இன்னும் எந்தெந்தெ ஸ்தலங்களுக்குப் போகப் போகிறீர்கள் ''என்று பெரியவா கேட்டார்.

தாங்கள் சென்ற ஊர்களைச் சொல்லிவிட்டு,கேரளாவில்
வைக்கம்,குருவாயூர், சோற்றாணிக்கரை ஆகிய
க்ஷேத்ரங்களுக்கும் போகப்போவதாக சொன்னார்கள்.
போகிற வழியில் , திருச்சி மாத்ருபூதேஸ்வரர் ,
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ,ஸ்ரீரங்கம்
ரங்கனாதர், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம்
முருகன், நெல்லையப்பர். குற்றாலம் குற்றால
நாதர் ஆகிய எல்லாக் கோவில்களுக்கும்
செல்லுமாறு பணித்தார்கள்.

ஆனால் அன்பர்கள் எல்லாருக்கும் இப்படிப்
போவதற்கு சாத்தியப் படவில்லை.

ஒரு பேருந்து அவர் சொன்ன வழியில் சென்றது.
மற்றது அவர்கள் ஏற்கெனவே தீட்டியிருந்த
திட்டப்படி சென்றது.

பத்து தினங்கள் கழிந்து செய்தி வந்தது;
பெரியவா சொன்ன வழியில் சென்ற பஸ்
எந்தவித பாதிப்பும் இல்லாமல் சௌகர்யமாக
திரும்பி வந்தது. மற்ற பஸ் நடுவில் விபத்தில்
சிக்கி சிலர் படு காயமடைந்தும் மற்ற சிலர்
சிவலோக ப்ராப்தி அடைந்ததாகவும் தெரிந்தது.
சபரிமலைக்கும் போகாமல் பயணம்
முடிந்தது

உயிர் தப்பிய கோஷ்டி வருடம் தோறும் சபரிமலை
சீஸனில் ஸ்ரீ மடத்துக்கு வர ஆரம்பித்தார்கள்.
பெரியவா முன்னால் சரண கோஷம் செய்து
வந்தனம் செய்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.
நீண்ட் சரண கோஷம் முடியும் வரை த்யான பரராக
பெரியவா கண்மூடி ஆத்மானந்தத்தில் மூழ்குவார்கள்.
ஜய ஜய சங்கரா....


நன்றி..கோதண்டராம சர்மாவின் தரிசன அனுபவங்கள்.





Courtesy :  Facebook  :   Saraswathi Thyagarajan 
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"".


""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன்"". 








1960ல், காஞ்சி மகாபெரியவர் கல்கத்தாவில் (கோல்கட்டா) முகாமிட்டிருந்தார். தினமும் ஆயிரக்கணக்கான வங்காளி பக்தர்கள், பெரியவரைத் தரிசனம் செய்து சென்றனர். அங்கு வசித்த நரசிம்மன் என்ற பக்தர், பெரியவரின் தீவிர பக்தர். 

ஒருநாள், தனது வழக்கமான பூஜைகளை முடித்த பெரியவர், பக்தர்களுக்கு தரிசனம் தர தயாரானார். அங்கிருந்த நரசிம்மனை அழைத்து, ""நரசிம்மா! கல்கத்தாவில் ஒரு வேத பாடசாலை நிறுவ விரும்புகிறேன். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வேதாந்த மாணவர்கள் படிக்க, தங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்தப் பணிக்கு நீயே பொறுப்பேற்க வேண்டும், ஏற்றுக் கொள்வாயா?'' என்று கேட்டார்
.
நரசிம்மன் பெரியவரின் உத்தரவை அப்படியே சிரமேற்கொள்வதாக <தெரிவித்தார்.

இதன்பிறகு, பாடசாலை அமைப்பதற்குரிய பல இடங்களைப் பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட இடம், நரசிம்மனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு வங்காள தம்பதிக்கு சொந்தமான இடம் அது. நரசிம்மன், தனது நண்பர் ஒருவருடன் அவர்களது வீட்டுக்குச் சென்றார். வேதபாடசாலை நிறுவ, அந்த இடம் வேண்டும்என அவர்கள் அந்த தம்பதியிடம் கேட்டனர்
.
பெரியவரின் உத்தரவுப்படி நிறுவப்படும் வேத பாடசாலை என்பதால், அந்த தம்பதிக்கு மிக்க மகிழ்ச்சி. இடத்தைத் தருவதாக உறுதியளித்து விட்டனர். பத்திரம் பதிவதற்காக, ஒரு குறிப்பிட்ட நாளில், அவர்களை வரச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன நாளில், நண்பர்கள் இருவரும் வங்காள தம்பதி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், திடீரென அவர்கள், தற்போது தங்களால் அந்த இடத்தைத் தர முடியாது என மறுத்து விட்டனர். நண்பர்கள் இருவரும், அவர்களது முந்தைய வாக்குறுதியை நினைவுபடுத்தினர். ஆனால், அவர்கள் வருந்தும் வகையில் சிலவார்த்தைகளையும் சொல்லி, வெளியே அனுப்பி கதவையும் தாழிட்டு விட்டனர்.

ஆனாலும், நண்பர்கள் மேலும் சிலமுறை அந்த தம்பதியரை அணுகினர். ஆனால், காரியம் நடக்கவில்லை. இதற்குள் காஞ்சிக்கு சென்று விட்ட பெரியவரைச் சந்தித்து, இடம் கிடைக்கவில்லை என்று சொல்ல எண்ணி, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை விமானத்தில் கிளம்ப திட்டமிட்டனர். அப்போது, பெரியவர் சென்னை சமஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்தித்து விபரத்தைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டுக்கொண்ட பெரியவர், ""நீங்கள் மாலை 5 மணி விமானத்திற்கு உடனே கல்கத்தா புறப்படுங்கள். நாளை காலை அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். அங்கு போய் வந்த பிறகு, என்ன நடந்ததென்று சொல்லுங்கள்,'' என்றார்.

அவர்களும் அன்றே கல்கத்தா பறந்தனர்

மறுநாள் காலையில் மகாபெரியவரை மனக்கண்ணால் தரிசித்து விட்டு, அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர்.

என்ன ஆச்சரியம்!

அந்த தம்பதிகள் இவர்களை வரவேற்று நமஸ்கரித்தனர்

""நேற்று இரவு எங்கள் இருவர் கனவிலும் காளி தோன்றினாள். வேதபாட சாலைக்கே இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். அந்த இடத்தை நாங்கள் உங்களுக்கே தருகிறோம்,'' என்று கண்ணீர் மல்கக் கூறினர்.

நரசிம்மன் நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்!

""உன் வீட்டுக் கதவைத் திற, வங்காளிகளின் உயிர் மூச்சான காளி உள்ளே வருவாள். உங்களுக்கும் அருள்வாள், உலகத்திற்கும் நன்மை செய்வாள்,'' என்று மகாபெரியவர் மூலமாக அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோ!'' என்று நெகிழ்ந்து போனார்கள்.


நவராத்திரி துவங்க உள்ள இந்த சமயத்தில், மகாபெரியவரின் இந்த அரிய அற்புதத்தை அறிந்து கொண்ட நாம் மகா பாக்கியசாலிகள்! நிஜம் தானே!


சி.வெங்கடேஸ்வரன்


நன்றி-தினமலர் செப்டம்பர்
Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Saturday, June 6, 2015

சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)-Saidapet Sri Karaneeswarar koil kumbabisekam -07-06-2015 @10 AM


சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)

சென்னையில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் சைதாப்பேட்டை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

எதிர்வரும் 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 
நேரம் : காலை 08.35 மணிக்குமேல் 10.05க்குள்
மஹா கும்பாபிஷேக வைபவம் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இறை அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப்பெற்றேகும் வண்ணம் வேண்டிக்கொள்கின்றோம்.

ஸ்தல வரலாறு....

எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஈசனை வந்து வணங்கினால் அந்தக் காரணம் எல்லாம் கனிவாக நிறைவேறும். அதனாலேயே இந்த ஈஸ்வரன், காரணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பிகை சொர்ணாம்பிகை. தூண்களிலும், சுவர்களிலும் காரணீஸ்வரர் கருவறை மேல் விதானத்திலும் அநேக மீன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து இக்கோயில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

கமிகா ஆகமப்படி இக்கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் போது எட்டாம் நாள் அன்று நடத்தப்படும் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அக்காட்சியைக் காண்பதால் பிறக்கும் குழந்தை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறார்கள்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!



-------------------------------------------------------------------------------------------------------------
Maha Kumbabisekam of Sri Karaneeswara koil  saidapet will take place on 07.06.2015 at 10 AM .

In the evening  Thirukalyana will take place and  Sri Somasankadar will give darshan 



























Tuesday, May 19, 2015

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"
(கோபப் புயலாய் இருந்த பெரியவா அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)












ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக
வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள்
பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்.

சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.

ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.

ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர்.

'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்.

அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?

'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!

"ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!

முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்!

விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!

கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.

வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:

"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.

"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா? 

அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.

அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!

உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!

அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்!







Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்

வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்

(ரா.கணபதியின் அற்புத எழுத்தாக்கம்)

மூலம்------------‘சங்கரர் என்ற சங்கீதம்’
ஆசிரியர்---------------ரா.கணபதி.










"ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்"

கோதை போற்றிய ‘கூடாரை வெல்லும் சீரை’ ஒரு ஸ்ரீவைஷ்ணவர் விஷயமாகவே ஸ்ரீசரணர் சிகரமேற்றிக் காட்டிய நிகழ்ச்சி.

அபாரமான சாஸ்திரப் புலமை பெற்ற மஹாவித்வான் என்று ஒருவரைப் பற்றி ஸ்ரீசரணர் கேள்விப் பட்டிருந்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்றபடி பண்டித திலகமான ஸ்ரீசரணர் அவரை சந்திக்க ஆர்வமாயிருந்தார்.

ஆனால் அந்தக் கற்றார் இந்தக் கற்றாரைக் காமுறவில்லை. காரணம் அவர் வீர வைஷ்ணவர், வீர சூர வைஷ்ணவர் என்றே சொல்லுமளவுக்குச் சென்றவர். ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் மேற்கொண்ட ஒரு ஏகதண்ட ஸன்னியாஸியைப் பார்ப்பதே தோஷம் என்று கருதியவர்.




அவருடைய ஊருக்கே பெரியவாள் சென்றிருந்தார். அப்போதும் ஊரே திரண்டு வந்து கண்ட பெரியவாளைக் காண அவர் வராமலே இருந்தார். பேதமறியா மன இசைவே திரண்டு வந்த திருவடிவமான பெரியவாளோ அந்தப் பெரியவர் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஊர் முழுதும் பெரியவாள் பெருமை பேசுவதை வைணவப்பெரியார் கேட்டார். அது அவரை எவ்வளவு தூரம் தொட்டதோ? ஆனால் பெரியவாளிடம் வந்து போகும் பல மஹாவித்வான்கள் அவரது வித்வத் பெருமையைச் சொல்லக் கேட்டபோது அப்பெரியாரும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

அதுவே தருணமென்று பெரியவாள் ஸத்வகுணரான ஒரு வித்வான் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார். வித்வான் வைணவர் வீடு சென்று மரியாதை முறைப்படி பெரியவாளின் அழைப்பைத் தெரிவித்தார்.

இவ்வளவு தூரம் பண்டிதர் பாமரர் புகழும் அந்தப் பெரியவரை தாமும்தான் சென்று பார்த்துவைப்போமே என்று வைணவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“கூப்டு அனுப்பிச்சிருக்கார். மாட்டேன்னு சொல்லப்படாதுதான். ஆனாலும் எனக்குச் செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறுகிறத்துக்கில்லை. அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம். அதுதான் யோஜனையா இருக்கு.” என்றார் அவர்.

அந்தப் பிரதிக்ஞைகள் என்னவென்று ஸ்ரீமடத்து வித்வான் கேட்டார்.

வைஷ்ணவர் மூன்று ப்ரதிக்ஞைகள்---அல்லது நிபந்தனைகள்----கூறினார். ஒன்று---பெரியவாளை அவர் நமஸ்கரிப்பதற்கில்லை. இரண்டு----பெரியவாள் ப்ரஸாதம் கொடுத்தால் ஏற்பதற்கில்லை. மூன்று---வித்வத் ஸம்பாவனை என்று சால்வை போர்த்துவது போல் ஏதேனும் பெரியவாள் செய்தாலும் அதையுங்கூட அங்கீகரிப்பதற்கில்லை.

இப்படிக் கடும் நிபந்தனை போடுபவரை எதற்காக வர்வேற்க வேண்டும் என்று நமது வித்வானுக்கு---அவர் ஸத்வகுணிதான் எனினுங்கூட------தோன்றிவிட்டது.

மரியாதையாகவே அங்கிருந்து விடை கொண்டு ஸன்னிதானம் சென்று, “ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை. அவர் ரொம்ப நிர்தாக்ஷண்யமா கண்டிஷன் போடறார்” என்றார்.

“அப்படியா! ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கேள்!” என்றார் ஸ்ரீசரணாள்.

வித்வானுக்குப் புரியவில்லை. எந்த வித்வத்திற்கும் புரிபடாத ஸூக்ஷ்ம நோக்கில் பேசுபவரல்லவா பெரியவாள்?

“எப்படி நல்ல சேதின்னு புரியலையே?” என்றார் வித்வான்.

“கண்டிஷன் போடறார்னு நீங்க சொன்னதுலேந்தே அவர் முடுஞ்ச முடிவா ‘வரவே மாட்டேன்’னு சொல்லலை. கண்டிஷன் எதுக்கோ உட்பட்டா வரேன்—னு சொல்றார்—னுதானே ஆறது? அந்த மட்டுக்கும் நல்ல சேதிதானே?”---பெரியவாள் இன்னகை பூத்து “என்ன கண்டிஷன்?” என்றார்.

‘சொல்றத்துக்கே மனஸ் இடம் குடுக்கல்லை’ என்று கூறி, வித்வான் வீர வைஷ்ணவப் பெரியாரின் மூன்று நிபந்தனைகளை சிரமப்பட்டுத் தெரிவித்தார்.

பெரியவாளோ ஸகஜமாக, “அவர் இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு? அவருக்கு இயலாதப்ப அவர் கண்டிஷன் போட்டதிலே என்ன தப்பு? எனக்கு நெஜமாவே அவர் ஒரு வித்வத் ஸ்ரேஷ்டர், அவர் கிட்ட புதுசா ஏதோ கொஞ்சமாவது க்ரஹிச்சுக்கப் பார்க்கலாம்னு இருந்தா கண்டிஷனை நான் பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?” என்று நியாயம் கேட்டார் ஸத்யமூர்த்தி!.

அநுபூதி கண்ட மஹாபுருஷனுக்கு யாரைப் பார்த்து என்ன ஆக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவரோ நரவேடம் பூண்டு, ஆதரிச நிலைகளை நமக்குக் காட்டுவதில் வித்யையில் இருக்க வேண்டிய ஆர்வம், அதன் பொருட்டாகக் காட்டவேண்டிய விநயம் இவற்றில் நமக்குப் பாடம் கொடுக்கவே, தாம் ஸர்வக்ஞராக இருந்த போதிலும் வேறொரு வித்வானிடமிருந்து கொஞ்சமாவது க்ரஹித்துக்கொள்ள இயலுமா என்று பார்ப்பதற்காக அவர் விதிக்கும் கடும் நிபந்தனைகளுக்கு உடம்பட்டுக் காட்டினார்.

[ வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்]

வித்வான் ப்ரதிக்ஞா—பங்கமில்லாமலே தம்மிடம் வரலாம் என்று ஸ்ரீசரணர் செய்தியனுப்பினார்.

அவரும் பெருமிதத்துடன் வந்தார்.

பெரியவாள் அழகிய ஸம்ஸ்கிருதத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகளைக் கலந்து, அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கென இடப்பட்டிருந்த மணையில் அமரச் சொன்னார்.

அதுவே அவரது கடினத்தில் சிறிது நெகிழ்வை ஏற்படுத்தியதென்றாலும், நமஸ்காரம் செய்யாமலேதான் அமர்ந்தார்.

ஸ்ரீபாஷ்யம் (‘ப்ரஹ்ம ஸூத்ர’த்திற்கு ஸ்ரீ ராமாநுஜரின் பாஷ்யம்) பற்றியே முக்யமாகப் பெரியவாள் அவரிடம் கேட்கலானார். ‘கேட்கலானார்’ என்பது போகப் போக அந்தப் பெரியார் கேட்க இந்தப் பெரியவாள் சொல்வதாகவே உருமாறிற்று1 அவரிடம் இவர் கொஞ்சமாவது க்ரஹித்துக் கொள்ள இடமிருந்ததோ என்னவோ, இவரிடமிருந்து அவர் நிறையவே க்ரஹித்துக் கொண்டார் என்பதை அந்த அறிஞர் கேட்டுக்கொண்ட ‘பா’வமும் அவரது முகமலர்ச்சியுமே காட்டியது.

பண்பு மிக்க ஸ்ரீசரணர் அவரை ஊக்கி ஊக்கி நிறையக் கூறவும் வைத்தார். ஓர் அறிவு மலையிடம் பேசுகிறோம் என்று புரிந்து கொண்ட வைஷ்ணவரும் உத்ஸாஹத்துடன் தமது பாண்டித்தியத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்று உயர்த்திக் காட்டாமலே பெரியவாள் ஸ்ரீசங்கர பாஷ்யத்தில் இப்படி இப்படி என்றும் அங்கங்கே சொல்ல, அந்த அறிஞர் அவற்றிலும் ஆழ்பொருள் இருப்பதை ஒப்பி மகிழாமலிருக்க முடியவில்லை.

ஆக நெடுநேரம் சம்பாஷணை நடந்து இனிக்க முடிந்தது.

இரு வித்வான்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இனிமைதான்! நம் விஷயமான இதய இனிமை இல்லை!

அதுவும் வருகிறது இனி!

சிரம பாராட்டாது அந்தப் பெரியவர் வந்து நெடுநேரம் தம்மை வித்வத் கடலாட்டியதில் தமது மகிழ்ச்சியையும்—நன்றியையுமே---தெரிவித்து அவருக்குப் பெரியவாள் விடை கொடுத்தார்.

அவரோ தம்மைத் ‘தாஸன்’ என்று சொல்லிக்கொள்ளுமளவுக்குத் தழைந்து,” பெரியவாளுக்குத் தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கு இல்லை. ஆன தாஸனுக்குத் தெரியாத கருணை பெரியவாளூக்கு இருந்துதான் கூப்டு அனுப்பி அநுக்ரஹிச்சிருக்க”---என்று சொல்லி, தண்டகாரமாக நமஸ்கரிக்க முற்பட்டார்.

‘கருணை’, ‘அனுக்ரஹம்’ என்ற சொற்கள் வந்து விட்டதோ இல்லையோ? இதயமும் வந்து விட்டது!

நமஸ்கரிக்க முற்பட்டவரை, “வேண்டாம்!ப்ரதிக்ஞா பங்கமாயிடும்” என்று பெரியவாள் தடுத்தார்.

ஆனால் அவரோ, ‘ப்ரதிக்ஞையெல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுப் பன்ணினதுதானே? ஸன்னிதானத்துல அதுக்கு ப்ரஸக்தியில்லே [அதைப் பொருத்துவதற்கில்லை]” என்பதாக தெய்வங்களின் மட்டத்தில் ஸ்ரீசரணாளைக் கூறி நமஸ்காரம் செய்தே தீர்த்தார்!

தெய்வமாகவே பொலிந்துகொண்டு ஸ்ரீசரணர் அதை ஏற்றார்.

“மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்” என்றும் வைஷ்ணவர் தாமாகக் கேட்டுப் பிரஸாதம் பெற்றார். அதாவது, இரண்டாவது நிபந்தனையையும் அவரே தகர்த்துக் கொண்டார்.

“ என் ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையையும் விடலாம்னு தோணினா, ஒரு மஹாவித்வான் வந்து மடத்துல அவருக்கு ஸம்பாவனை பண்ணலே—ங்கற கொறை எனக்கு இல்லாம இருக்கும்” என்றார் ஸ்ரீசரணர்.

“பெரியவா எது பன்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர் கூற, பெரியவாள் மிக உயர்ந்த சால்வை தருவித்து ஸ்ரீமடத்து வித்வானைக் கொண்டு அதை அவருக்குப் போர்த்தினார்.









Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

யோக புருஷர்; ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.


யோக புருஷர்;ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

யார் ஸித்தர்?"

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்








பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

"பெரியவா எங்கே?" என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

"சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்" என்றார்,
மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

"என்னது? சாயங்காலமா?... என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்"
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

"என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது"
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி...!
இத்தனை கோபம் கூடாது...."

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 

"சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம
எசமான் ஓடிப் போறாங்க"

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

"நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
'மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார். 

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.