Tuesday, March 31, 2015

"இதுவும் பூஜைதான்!" மஹபெரியவா





"இதுவும் பூஜைதான்!" 

தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார்.
வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த அதிவினய பக்தியுடன் கைகூப்பி நின்றார்கள்.காணிக்கையுங்கூட ஸமர்ப்பித்தார்கள்.

தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக, அவர்களது நலன்களை, நலன்கள் இல்லாமையும் கேட்டுக் கொண்டார்-ஓடாமல்,பறக்காமல் நின்று நிதானமாக!

இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர  மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும்-துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து 
முடிவு செய்தார்.

இதிலேயே ஓரளவு நேரம் சென்றதில் அடுத்த முகாம் அடையத் தாமதமாகுமே என்று மானேஜரும் மற்ற பரிவாரத்தினரும் எண்ணினர்.

ஆனால் ஏழையர் தெய்வமோ நிம்மதியாக உட்கார்ந்து விட்டது. சிப்பந்திகளை அனுப்பி அவ்வளவு நந்தன்-
நந்தினிகளுக்கும் வேட்டி புடவை வாங்கி வரச் சொல்லி விட்டது. அந்தச் சிற்றூரில் அவ்வளவு ஜவுளி ஸ்டாக் இல்லை என்று தெரிந்த பின்னும் விடாமல் அருகிலுள்ள சற்றுப் பெரிய ஊரான குடவாசலுக்கே போய் வாங்கிவர ஆணை பிறப்பித்தது.

அந்த நடுவழி மர நிழலிலேயே அவர்களுக்கு 'திண்டி'யாக ஒரு ஸாம்பார் சாதமும் தயாரிக்க உத்தரவிட்டுவிட்டது. இதெல்லாம் முடித்துப் புறப்பட இரண்டு மூன்று மணி அவகாசம் பிடிக்குமே, வெயிலும் நன்றாக ஏறி விடுமே,அதற்கப்புறம் அடுத்த முகாம் போய் பெரியவாளுக்கே உரிய அந்தப் பல மணி நேர பூஜை செய்வதென்றால் மிகவும் ஆயாஸமாகிவிடுமே! இதை எண்ணி மானேஜர் கவலைப்பட்டார்.

"இப்பவே டயம் ஆயிடுத்து. இன்னும் உத்திரவானதை யெல்லாம் பண்ணிட்டுப் போய் அப்புறம் பூஜை....." என்று அவர் சொல்லிவரும் போதே......

ஸ்ரீசரணர் (பெரியவா) குறிக்கிட்டு,  "இதுவும் பூஜைதான்!" என்றார்.














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


No comments: