Tuesday, April 28, 2015

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!

கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள். கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரர். அதிஷ்டானம் கொண்டுள்ளார். 22-8-2008, வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேகவைபவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரது காலம் கி.பி. 1638-1692. அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது. நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம். கஷ்டங்களைப் போக்கலாம்; பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.

ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.

நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள். நாம சங்கீர்த்தனம் என்றால், இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம். கஞ்சிரா முதலான பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.

கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம். இதற்கு கால நேரம் கிடையாது. என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார். இதிலிருந்தே அவரது பக்தியின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம். போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர். கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர், ஷேத்ரக்ஞர். மகாராஷ்டிரத்தில் துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர், துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக் குருகோவிந்தசிங், மீரா போன்றோரும் அவதரித்தனர். மொத்தத்தில் பார்த்தால். இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள். ஒரே காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.

போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்? புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை, மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது? என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.

இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள் என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை. பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர், பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.

குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே. போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று. நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார். விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள். குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து, போதேந்திரர், காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான், போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர். கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள். ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி. பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.

போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.
அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். ஊமை, சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம். அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்? எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து, வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.

ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம், மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால், சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.

அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான். வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர். திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே! உனக்கு பேச்சு வந்துவிட்டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.

வெளியே, வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை, எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா, அந்தச் சிறுவன் பேசினான்! அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ? மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.

கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.

கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார். சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும். அவர்களுக்கு குஷி பிறந்துவிடும். துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!

அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது. நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள். தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன? என்றார்.

ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர். மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.

ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது. பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.

ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா? பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி. போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள். உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம் வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க ஆரம்பித்தார்கள். அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது. இது, ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், ஆற்று மணல், ஆம்! மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார். இந்த மகான்? மருதாநல்லூர் ஸ்வாமிகள் (இவரது காலம் கி.பி 1777-1817 என்பர்) போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி, தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மகான்களைப் போற்றியவர்.

மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால் இருந்து வந்தது. காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும் முழ்கடித்துவிட்டது. எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி, போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல், தடுப்பு வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள். மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும் மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான். போதேந்திரரின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார். என்று தகவல் சொல்வார்கள். சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள். மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும்-அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சியமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள். அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே! படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன். இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார். அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள் அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள். அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நித்ய பூஜை. அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி. ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம். பதினொரு மணிக்கு அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை, அன்னதானம்.

Kannappa swmigal - கன்னப்பா சுவாமிகயில்













Courtesy : Thanks to tamil paper -- "the hindu - " 
Photos scanned by myself.











Kannappa Swamigal Temple, Kavankarai, Near Red Hills)

Thursday, April 23, 2015

ஸ்ரீ சங்கர ஜெயந்தி- இன்று - 23.4.2015

               ஸ்ரீ சங்கர ஜெயந்தி-23.4.2015

நன்றி-தினகரன்.








ஆசார்யாள் பிறந்த ஊர் காலடியானாலும், ஸ்வாமி தாமே அவராகப் பிறக்கப் போவதாக அவருடைய பிதாவான சிவகுருவுக்கு வரம் தந்தது திருச்சூரில். திருச்சூர், சிவகுரு என்பவற்றைப் பற்றி என் ஆராய்ச்சியைச் சொல்கிறேன். ஆசார்யாள் கதையைவிட மலையாளத்தின் கதைக்கே அது அதிக ஸம்பந்தமுடையது என்பதால். ஒரு நாட்டினர் வேறொரு நாட்டுக்குக் குடி பெயரும் போது தங்களுடைய பழைய நாட்டில் தாங்கள்வாழ்ந்து வந்த ஊர்களின் பெயர்களையே புதிய நாட்டின் ஊர்களுக்கும் வைப்பது ஸஹஜமாயிருக்கிறது. தாய்நாட்டைவிட்டு வந்து விட்டாலுங்கூட மாத்ரு பூமியபிமானம் இப்படிப் பண்ணத் தூண்டுகிறது. இங்கிலீஷ்காரர்கள் அமெரிக்காவில் குடியேறியபின், இம்மாதிரிதான் தங்கள் தாய்நாட்டு ஊர்ப் பெயர்களுக்கே ‘ந்யூ, ந்யூ’ என்று சேர்த்து அமெரிக்காவில் புதிய ஊர்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

‘ந்யூ இங்லாண்ட்’ என்றே அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் ஆறுக்கும் சேர்த்துப் பெயர் உண்டு. இங்லாண்டில் யார்க்ஷயர், ஹாம்ப்ஷயர், ஜெர்ஸி என்றெல்லாம் இடங்கள் இருப்பது போலவே அமெரிக்காவில் ந்யூ யார்க், ந்யூ ஹாம்ப்ஷயர், ந்யூ ஜெர்ஸி என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். இப்படியே கிழக்கே ஆஸ்ட்ரேலியாவிலும் தங்கள் தாய்நாட்டுப் பேர்களை வைத்தார்கள். ந்யூ ஸௌத் வேல்ஸ் என்றே அங்கே ஒரு மாகாணத்துக்குப் பேர். இதேபோலத் தமிழ்நாட்டிலிருந்து பல பேர் மலையாளத்துக்குப் போய் ‘ஸெட்டில்’ஆனபோது தமிழ்நாட்டுப் ஊர்ப் பெயர்களை அங்கே வைத்தார்கள். ஆல்வாய், (ஆலவாய்) , பழூர் (பழுவூர்), கண்ணனூர், மாத்தூர், மேச்சேரி என்றெல்லாம் மலையாளத்து ஊர்கள் இருப்பது, தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களை அங்கே வைத்ததுதான்!

ஆசார்யாள் சரிதத்திலிருந்து பல நூற்றாண்டுகள் தாண்டி வருவோம். காஞ்சீபுரத்தில் இருந்துவந்த நம் மடம் பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் அங்கேயிருந்து புறப்படவேண்டி வந்து, முடிவாகக் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் Carnatic Wars என்று சொல்லப்படும் யுத்தங்களில் காஞ்சிப் பிரதேசத்தில் ஓயாத சண்டையும் முற்றுகையுமாக இருந்தது. ஆர்க்காட்டு நவாப், ஈஸ்ட் இண்டியா கம்பெனி, ப்ரெஞ்சுக்காரர்கள், ஹைதர் அலி என்று எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் குஸ்தி போட்டுக் கொண்டிருந்ததில் காஞ்சீபுரத்தில் கோவில்களையே கோட்டையாக உபயோகித்துக்கொண்டு ஆயுதங்கள் வீசுவது, ஊருக்குள் புகுந்து சூறையாடுவது என்றெல்லாம் விபரீதமாக நடந்து வந்தன.

அதனால்தான் அப்போது நம் மடத்திலிருந்த ஸ்வாமிகள் (62வது பீடாதிபதிகளான ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) இடம் மாற்றியது. ராமேச்வரம் வரை யாத்ரை போய்விட்டு அப்புறம் உடையார்பாளையம் என்ற ஸம்ஸ்தானத்திற்குப் போய்த் தங்கினார். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள உடையார்பாளையம் அப்போது தஞ்சாவூர் மஹாராஷ்ட்ர ராஜ்யத்திற்கு உட்பட்ட ஒரு ஜமீன்தாரி மாதிரி இருந்தது. அந்த ஸம்ஸ்தானாதிபதிகள் நம்முடைய மடத்தை ஆச்ரயித்து வந்தவர்கள். அதனால் அப்போதிருந்த ராஜாஅல்லது ஜமீன்தார்அப்போதிருந்த ஸ்வாமிகளை அங்கே வந்து தங்கும்படி ப்ரார்த்தித்துக் கொண்டதன் பேரில் ஸ்வாமிகளும் அப்படியே பண்ணினார். 





அது நன்றாகக் காடுகள் சூழ்ந்து தற்காப்பாக இருந்த இடம். அதனால் வெளிச் சண்டை சச்சரவுகள் அதிகம் பாதிக்காத இடம். அந்நிய மதஸ்தர்கள் வந்து இங்கே பரஸ்பரம் குஸ்திப் போட்டுக்கொண்டிருந்த ஸமயத்தில் மடம் பாதுகாப்புக்காக வேற்றிடம் போனதற்குக் குறிப்பாக ஒரு காரணம் உண்டு. அதுதான் ஸ்வர்ண காமாக்ஷி என்பதாகச் சொக்கத்தங்கத்திலேயே ஆன அம்பாளின் விக்ரஹம். காமகோஷ்டம் (காமகோட்டம்) என்னும் காஞ்சி காமாக்ஷி கோவிலில் ஒரு ஸந்நிதி யில் அந்த ஸ்வர்ண விக்ரஹம் இருந்து வந்தது. அந்தக் கோவில் நம் மடத்தின் நிர்வாஹத்தில் இருப்பது.

ஆகையால் குஸ்தி பிடித்துக்கொண்டிருக்கிற அந்நிய மதஸ்தர்கள் சந்தடிச் சாக்கில் ஸ்வர்ண விக்ரஹத்தை அபஹரித்து விடாமல் பாதுகாப்புப் பண்ணவேண்டிய பொறுப்பு மடத்துக்கு இருந்தது. இப்போது காப்பான இடமாக இருந்த உடையார் பாளைய ராஜா அழைப்பு அனுப்பியவுடன் மடம் அங்கே போய்த் தங்கியதோடு ஸ்வர்ண காமாக்ஷியும் கோவில் ஸ்தானீகர்களால் ஜாக்ரதையாக அங்கே கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாள். அன்றிலிருந்து காமகோஷ்டத்தில் அந்த ஸந்நிதி காலியாகவே இருந்து வருகிறது.

ஸ்வர்ண காமாக்ஷி மட்டுமில்லாமல், இதே மாதிரி யான கலவர காலங்களில் சிதம்பரம் நடராஜா, திருவாரூர் த்யாகராஜா, காஞ்சி வரதராஜா (உத்ஸவர்), ஸ்ரீரங்கம் ரங்கராஜா (உத்ஸவர்) ஆகியவர்களும் தங்கள் இடத்தை விட்டு ஸஞ்சாரம் பண்ணும்படியாக ஏற்பட்டிருக்கிறது. ராஜாக்கள்! அதிலும் ஸ்வாமியே ராஜாவானவர்கள்! ஆனால் திக் விஜயம், ராஜ பவனி என்றில்லாமல், இந்த மாதிரி சண்டைக்கு பயந்துகொண்டு ஏன் போகும்படி இருந்ததென்றால், நடு நடுவே நம் மதஸ்தர்கள் ஸமயாபிமானம் குன்றிச் சோர்ந்து போயிருந்தபோது அதற்குத் தண்டனையாகவும், மறுபடியும் அவர்களை எழுப்பித் தூண்டி விடுவதற்காகவும்தான்! ஸ்வாமிக்கு சக்தி இல்லாமல் போய்விட வில்லை! 




நாம் ஆலஸ்யமாய் சக்தி இழந்து இருந்ததற்கு அநுபவிக்க வேண்டுமென்றும், அதோடு அந்த மஹா க்ஷேத்ரமூர்த்திகளுடைய ஸாந்நித்யம் வேறு க்ஷேத்ரங்களிலும் ஏற்படவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். ஸ்வர்ண காமாஷிக்கு மாத்ரமின்றி, ஊரைவிட்டு ஊர் போன நடராஜா, த்யாகராஜா, ரங்கராஜா, வரதராஜா ஆகிய எல்லோருக்குமே ‘டெம்பரரி’ வாஸ ஸ்தானமாக இருந்தது உடையார்பாளையம் தான். பாதுகாப்பான இடமாக இருந்ததோடு, நல்ல ஆஸ்திக்ய புத்தி வாய்ந்த ஜமீன்தார்களின் ஆட்சியிலிருந்ததால் அதற்கு இந்தப் பெரிய புண்யம்.

‘ஸ்வாமி’ என்பதற்கு நேர் தமிழ் உடைமைக்காரர், அல்லது உடையார் என்பதுதான். உடையார் பாளையம் தன் பெயருக்கேற்ப அநேக உடையார்களைத் தன்னிடம் உடையதாகப் பெற்றது! அப்புறம் ஸமாதான காலம் வந்தபோது அந்தந்த மூர்த்தி அதனதன் ஊருக்குத் திரும்பிப் போயிற்று. காமாக்ஷி மட்டும் தஞ்சாவூருக்குப் போய் அங்கேயே ஸ்திரவாஸம் கொண்டுவிட்டாள். உடையார்பாளையத்தில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன. சிவன் கோவிலில் இன்றைக்கும் ‘ஸபாபதி மண்டபம்’, ‘த்யாகராஜ மண்டபம்’, ‘காமாக்ஷிமண்டபம்’ என்று அந்த மூன்று மூர்த்திகளும் தாற்காலிக வாஸம் செய்த ஸந்நிதிகள் இருக்கின்றன. அதேபோல அங்கேயுள்ள பெருமாள் கோவிலில் ரங்கராஜ, வரதராஜ விக்ரஹங்கள் இருந்ததற்கும் சான்று இருக்கிறது.

தஞ்சாவூரிலிருந்துகொண்டு அப்போது ஆட்சி செலுத்திவந்த ப்ரதாபஸிம்ஹ மஹாராஜா, தன்னுடைய ராஜ்யத்தில் சேர்ந்ததான உடையார் பாளையத்தில் இருந்து வரும் ஸ்வாமிகளும் மடமும் ராஜதானியான தஞ்சாவூருக்கே வந்துவிட்டால் நன்றாயிருக்குமே என்று நினைத்தார். அப்படியே ஸ்வாமிகளுக்கு ப்ரார்த்தனை செய்துகொண்டு அழைப்பு அனுப்பினார். ஸ்வாமிகளும் தஞ்சாவூருக்குப் போய்க் கொஞ்சகாலம் தங்கினார். ஸ்வர்ண காமாக்ஷியும் கூடப் போனாள். அப்புறம் அவருக்கு, ‘ஸப்த நதிகளில் த்ராவிட தேசத்தில் இருக்கும் ஒன்றே ஒன்றான காவேரி இந்தத் தஞ்சாவூர் மண்டலத்திலேயே ஓடும்போதிலும் நம்முடைய மடத்தை அதன் தீரத்தில் அமைத்துக்கொள்ளாமல் தஞ்சாவூரில் ஏன் அமைத்துக் கொள்ளணும்?’ என்று தோன்றிற்று.


அதனால் காவேரித் கரையிலுள்ள கும்பகோணத்துக்கு வாஸத்தை மாற்றிக் கொள்ள நினைத்தார். ராஜாவும் ஸம்மதித்து மஹாராஷ்ட்ரா ப்ராம்மணரான மந்த்ரி டபீர் பந்த் என்பவரிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அதன்படி டபீர் பந்த் கும்பகோணத்தில் அமைத்துக்கொடுத்த மடமே அதற்கப்புறம் காஞ்சி பீடத்தின் ‘ஹெட் ஆஃபீஸா’கி விட்டது! மடத்தைச் சுற்றி டபீர் பந்த் தம் பெயரிலேயே அக்ரஹாரம் ஏற்படுத்திக்கொடுத்து வித்வான்களான ஸத் ப்ராம்மணர்கள் சூழ்ந்திருக்கும்படியாக உபகாரம் செய்தார்.ஆசை ஆசையாகக் கூப்பிட்டு வைத்து உபசாரம் பண்ணிய ராஜாவுக்கும் தஞ்சாவூர் ஜனங்களுக்கும் ஸந்தோஷமாக இருக்கட்டுமென்று ஸ்வாமிகள் ஒன்று பண்ணினார். என்னவென்றால் ஸ்வர்ண காமாக்ஷி தஞ்சாவூரிலேயே நித்ய ப்ரதிஷ்டையாயிருக்கட்டுமென்று ராஜாவிடம் சொன்னார்.

ஸ்ரீமடம் மாத்திரமே கும்பகோணத்திற்கு இடம் மாற்றிறு. ராஜா ஸந்தோஷமாக மேல வீதியில் கோவில் கட்டி அம்பாளுக்கு அதை நித்யவாஸமாக்கினார். “பங்காரு காமாக்ஷி’’ என்று இப்போதும் தஞ்சாவூரில் விளங்கி வருபவள், இப்படியாகக் காஞ்சீபுரத்திலிருந்து உடையார்பாளையம் வழியாக அங்கே வந்து சேர்ந்த ஸ்வர்ண காமாக்ஷிதான். ‘பங்காரு’ என்றால் தெலுங்கில் ஸ்வர்ணம் என்று அர்த்தம். ச்யாமா சாஸ்த்ரிகள் ஒரே தெலுங்குப் பாட்டுகளாகப் பாடியது இவள் மேல்தான். அவள் பேரிலும் ‘பங்காரு’ என்ற தெலுங்கு வார்த்தையே சேர்ந்துவிட்டது! காவேரி தீரத்துக்கு மடத்தை மாற்றவேண்டி வந்தபோது அப்போதிருந்த ஸ்வாமிகள் குறிப்பாக கும்பகோணத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்று நான் யோசித்துப் பார்த்தேன்.

தஞ்சாவூருக்கு இன்னம் ரொம்பக் கிட்டேயே ‘பஞ்சநதம்’ என்பதாக நாலு கிளை நதிகளோடு காவேரி ப்ரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறாள், அதுதான் திருவையாறு: திரு ஐ ஆறு, ஐந்து ஆறுகள்; அதுதான் ‘பஞ்ச நதம்’. பூலோக கைலாஸம் என்று சொல்லப்படும் மஹா க்ஷேத்ரம் அது. இன்னம் அநேக மஹாக்ஷேத்ரங்களும் காவேரிக் கரையில் இருக்கின்றன. காவேரி துலா ஸ்நான விசேஷத்திற்கென்றே ஏற்பட்டதாக மாயவரம் இருக்கிறது. இப்படிப் பல இருக்கும்போது கும்பகோணத்தை ஸ்பெஷலாக ஸெலக்ட் பண்ணுவானேனென்று யோசித்துப் பார்த்தேன். அப்போது கும்பகோண மஹாத்ரத்தின் மாஹாத்மியங்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அலைமோதிக் கொண்டு நினைவு வந்தன. 


 


முக்யமாக, இப்படி யோசித்துக் கொண்டே போகும்போது, ‘அட! நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே! ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே!’ என்று ஆச்சர்யப்படும்படியாகச் சில றீவீஸீளீகள் (இணைப்புத் துண்டுகள்) அகப்பட்டன. திருச்சூர் என்பதை நம்பூதிரிகள் ‘சிவபுரம்’ என்று சொல்கிறார்கள். தமிழில் சொன்னால் தமிழ்தானே மலையாளத்திலும் ஆதிபாஷை? அதனால் அப்படிச் சொன்னால் ‘சிவப்பேரூர்’. புண்யக்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா, அப்படி சிவப்பேரூருக்குத் என்றும் ‘திரு’போட்டு சொன்னால் ‘திருச்சிவப்பேரூர்’. ‘திருச்சிவப்பேரூர்’ என்பது மருவித்தான் ‘திருச்சூர்’ என்றாகியிருக்கிறது!

திருச்சூருக்கு சிவபுரம் என்று பேர் சொன்னேனல்லவா? சிவபுரம் என்று தமிழ் நாட்டிலும் ஊர் இருக்கிறது. அப்பர், சம்பந்தர் இருவருடைய தேவாரங்களும் அவ்வூர் ஸ்வாமிக்கு இருக்கிறது. அது கும்போகணத்துக்கு மூன்று மைலில் தென்கிழக்கே இருப்பது. ஒரு மஹாக்ஷேத்ரமிருந்தால் அதன் ஸாந்நித்யம் அதைச் சுற்றி ஐந்து க்ரோச ‘ரேடிய’ ஸுக்குப் பரவியிருக்கும் ஒரு க்ரோசம் என்பது ஸுமார் இரண்டு, இரண்டே கால் மைல். அதாவது ஒரு மஹா க்ஷேத்ரத்தின் தெய்விக சக்தி, அதைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்துக்குட்பட்ட வட்டம் முழுவதும் பரவியிருக்கும். பஞ்ச க்ரோச எல்லை என்று அதைச் சொல்வார்கள். சிவபுரம் அப்படிக் கும்பகோணத்தின் பஞ்ச க்ரோச எல்லைக்குள் இருப்பது.

பெரிய நகரங்களை அவற்றையொட்டியிருக்கும் சின்ன ஊர்களோடு சேர்த்து இன்னம் பெரிய நகரமாக Greater Bombay, Greater Madras என்றெல்லாம் சொல்கிற வழக்கமிருக்கிறதெல்லவா? பஞ்ச க்ரோச எல்லையை அப்படி வைத்துக்கொண்டால் சிவபுரம் Greater kumbakonam என்பதற்குள் வந்துவிடும்! தமிழ் தேசத்தில் கும்பகோணப் பஞ்சக்ரோச எல்லைக்குள் ஒரு சிவபுரம் இருக்கிறது. மலையாளத் தில் காலடிக்கு அருகே ஒரு சிவபுரம் (திருச்சூர்) இருக்கிறது. தமிழ்தேசத்திலிருந்து மலையாளத்துக்குப் போய்க் குடியேறியவர்கள் தங்களுடைய பூர்விக ஊர்களின் பெயர்களையே அங்கே வைத்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்று இருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, ‘இரண்டும் இரண்டும் நாலு’ என்கிற மாதிரி என்ன ஊஹிக்கமுடிகிறது?




கும்பகோணச் சிவபுரவாஸிகள் தான் ஆதியில் மலையாளத்துக்குப்போய் அங்கே தாங்கள் ‘ஸெட்டில்’ ஆன ஊருக்கும் அந்தப் பெயரையே ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் வைத்து, அந்த ஸம்ஸ்க்ருதப் பெயர் அதே ரூபத்திலேயும், தமிழ்ப் பெயர் ‘திருச்சூர்’ என்று மருவியும் இருக்கவேண்டும். அந்தத் திருச்சூரில் போய் பஜனம் இருந்துதான் ஆசார்யாளின் தாய் தந்தையர் ஈச்வரனிடமிருந்து வரம் பெற்று, ஈச்வரனையே அவதார புத்ரராகப் பெற்றது! கும்பகோணத்துக்கு ஆசார்ய ஸம்பந்தம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆசார்யாளுடைய தகப்பனாரின் பெயர் சிவகுரு என்பது. ரொம்பவும் பொருத்தமான பெயர்.

‘குரு’ என்றால் நேர் அர்த்தம் ‘பெரியவர்’ என்பது. அதனால் உபதேசம் செய்பவரை மட்டும் குரு என்று சொல்லாமல் தகப்பனாரையும் குரு என்று சொல்வதே வழக்கம். ஆகவே சிவ அவதாரத்துக்குத் தகப்பனாராக இருந்தவருக்கு சிவகுரு என்ற பெயர் பொருத்தந்தானே? ஆசார்யாளுடைய அம்மாவின் பெயரும் இப்படிதான்! ஆர்யாம்பா என்பது அந்த அம்மாளின் பெயர். எல்லாவற்றிலும் ச்ரேஷ்டராக இருந்ததால் நம் ஆசார்யாள் ‘ஆர்யர்’. அவருக்கு ‘அம்பா’ என்றால் ‘அம்மா’. அப்படியிருந்தவள் ஆர்யாம்பா. சிவகுரு ஸமாசாரத்துக்கு வருகிறேன். இந்தப் பெயர் நாம் ரொம்பக் கேள்விப்படுவதேயில்லை. தென்னாட்டில் இல்லாத அநேக பெயர்கள் வடநாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டிலும்கூடப் ‘சிவகுரு’ப் பேர்க்காரர்கள் இல்லை.

இந்தியாவில் எங்குமே அந்தப் பெயர் வைக்கப்படுவதாகக் காணோம். ரொம்பப் பேர், ‘சிவனாகிய ஆதிகுரு, அல்லது சிவனுக்கும் உபதேசம் செய்த குமார ஸ்வாமி இவர்கள்தான் சிவகுரு. மநுஷ்யர்களில் சிவகுரு என்றால் அது ஆசார்யாளின் அப்பர் ஒருத்தர்தான்’ என்று கூட நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அபூர்வமாகத்தான் ‘சிவகுரு’ என்று பேர் இருக்கிறது. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒரு ஊரைச் சுற்றி மட்டும் இந்தப் பெயர் சற்று அதிகம் அடிபடுகிறது. சிவகுருநாத செட்டியார், சிவகுரு உடையார், சிவகுரு பிள்ளைவாள் என்றெல்லாம் அங்கே காதில் படுகிறது. அது எந்த ஊர் என்றால் அதே கும்பகோணம் தான்! கும்பகோண வட்டாரத்தில் மாத்ரமே சிவகுருப் பேர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படி?
 

கும்பகோணத்துக்குக் கிட்டே பஞ்ச க்ரோச எல்லைக்குள் உள்ள அந்த சிவபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஈச்வரனுக்கு சிவகுருநாத ஸ்வாமி என்பதே பெயர்! முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேயே வந்துவிடுகிறது! அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டாமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிறார் இவர் சிவனாகிய குரு ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதாரத்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா சிவகுரு!

மலையாள ப்ராம்மணருக்குக் கும்பகோணச் சிவபுரத்து ஸ்வாமியின் பேர் இருக்கிறது; அவர் பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்தது மலையாளச் சிவபுரமான திருச்சூர் என்பதிலிருந்து என்ன நிச்சயப்படுகிறது? ஆதியில் கும்பகோணச் சிவபுரத்திலிருந்து பரசுராமர் அழைத்துக் கொண்டு போன சோழிய ப்ராம்மணர்கள் மலை யாளத்தில் குடியேறின ஊர்தான் திருச்சூர் என்றும் அப்படிப்போன குடும்பம் ஒன்றின் வம்சத்தில் வந்தவர்தான் சிவகுரு என்றும் தீர்மானிக்கத் தோன்றுகிறதல்லவா? திருச்சூரைச் சுற்றி அந்த வம்சாவளி பரவியபோது சிவகுருவின் தகப்பனாரான வித்யாதிராஜரோ அவருக்கும் முந்தி ஒருவரோ காலடியில் ‘ஸெட்டி’லாகி இருக்க வேண்டும்.

ஆனாலும் தங்கள் ஆதி ஊரான சிவபுரம், பிறகு மலையாளத்தில் ஸொந்த ஊராக ஆன திருச்சூர் ஆகிய இரண்டையும் அக்குடியினர் மறக்காமலே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வித்யாதிராஜர் புத்ரனுக்கு சிவபுரத்து ஸ்வாமியின் பெயரான சிவகுரு என்பதை வைத்திருக்கிறார். அப்புறம் அந்த சிவகுரு புத்ரனுக்காகத் தபஸ்பஜனம் இருக்க வேண்டுமென்று நினைத்தபோது திருச்சூருக்கே போயிருக்கிறார். ஆக ஆசார்யாளின் ஆதி பூர்விக மூதாதைகளே கும்பகோணம் வட்டாரத்துக்காரர்கள்தான் என்று ஊஹிக்க முடிகிறது. இதைவிட அந்த ஊருக்கு (கும்பகோணத்திற்கு) என்ன பெருமை இருக்க முடியும்?

அங்கே ஸ்ருஷ்டிக்கான அம்ருத கும்பம் வந்து தங்கினதைவிட, ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டு அமரமான மோக்ஷத்தை அடைவிக்கும் அத்வைத அம்ருத கும்பத்தை லோகமுள்ளளவும் ஜீவர்களுக்கு வற்றாமல் சுரக்கும்படியாக ஸ்தாபித்து வைத்துவிட்ட ஆசார்யாள் அந்த க்ஷேத்ரவாஸிகளின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்து அவதாரம் பண்ணினாரென்பதுதான் அதன் மஹா பெருமை. காஞ்சீபுரத்தில் இருந்த ஆசார்யாளின் ஸ்ரீமடத்துக்கு இன்னொரு ‘ஸெகண்ட் காபிடல்’ அமைக்க நேர்ந்தபோது கும்பகோணமே அந்த ப்ரைஸைத் தட்டிக்கொண்டு போனதற்கு இதுவும் ஒரு முக்யமான காரணம் என்று தோன்றிற்று.

ஆசார்யாளோடு அலாதியான ஆதி ஸம்பந்தம் அந்த ஊருக்கு இருப்பதான காரணம் ராமருக்கு ஸூர்ய வம்சம் என்பதுபோல ஆசார்யாளுக்குச் சொல்வதானால் அந்த வம்சப் பூர்விகர்களுக்கு எது ஜன்மக்ஷேத்ரமோ அது கும்பகோண வட்டம் என்பது. ஆசார்யாளுடைய ஜீவித முடிவுடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் காஞ்சி; அவருடைய ஜீவித ஆரம்பத்துடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் கும்பகோணம்! எப்படியென்றால், ஆசார்யாள் ஸித்தியடைந்த க்ஷேத்ரம் காஞ்சி. அவர் அவதார ஜன்மா எடுப்பதற்காக எந்த ஊரில் தபஸிருந்து வரம் பெறப்பட்டதோ அந்த ஊரின் மூலமான ஊரை அங்கமாகக்கொண்டது கும்பகோணம். அவரைப் பிறப்பிக்க நிமித்த மாத்ரமாக இருந்தவர் யாரோ அவருடைய பெயரைக் கொடுத்ததும் கும்பகோணம் வட்டாரம் தான். ஆசார்யாளின் ஆதி மூதாதை களின் ஜன்ம ஸ்தலமாக இருந்திருக்க கூடியது அந்த வட்டம்தான்.


நன்றி: தெய்வத்தின் குரல்


 




Courtesy :   Facebook post  :  Varagoor Krishna 
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

ஐந்தறிவு ஜீவனுக்கும் ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.

             ஐந்தறிவு ஜீவனுக்கும் 
ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.






ஜெகத்குரு ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணைக்கு கட்டியம் கூறும் வகையில் இன்று காலையில் ஒரு முதியவர் கூறிய நிகழ்வினையே இங்கு பகிர்கின்றேன்.
இந்த நிகழ்வு 1927ம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கலாம் என்று கூறி ஆரம்பித்தார் அவர். அந்த சமயத்தில் மடத்தின் முகாமுடன் நாய் ஒன்று வந்துகொண்டிருந்தது. அசுத்தங்களைத் தொடாத அந்த ஐந்தறிவு ஜீவன், மடம் முகாம் செய்யும் இடங்களிலெல்லாம் தங்கி, இரவில் மடத்தில் கால்நடைகளையும் சாமான்களையும் திருடர்கள் எடுத்துப் போகாமல் பாதுகாத்து வரும். அந்த ஜீவன் மடத்திலிருந்து போடப்படும் அன்னத்தை உட்கொள்ளுமே தவிர, வேறு யாராவது கொடுக்கும் எவ்வித உணவையும் அது உட்கொண்டதில்லையாம். அதனால் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் மாலையில் "நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகிவிட்டதா? என்று கேட்பார்கள். ஸ்வாமிகள் பல்லக்கில் ஆரோகணம் செய்து கொண்டு, ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகும்போது இந்த நாய் பல்லக்கின் கேழேயே போய்க்கொண்டிருக்கும். நடுவில் ஏதாவது ஓர் ஊரில் பக்தர்களுக்கு சேவை அளிக்கப் பல்லக்கு நிறுத்தப்பட்டால் இந்த நாய் வெகு தூரத்தில் போய் நின்று விடும். சில சமயம் சாலைகளில் நடந்து செல்லும் மடத்தின் யானையின் நான்கு கால்களின் நடுவே அது சென்று கொண்டேயிருக்கும். மடத்தின் காவல்காரர்கள் சற்று அயர்ந்திருந்தால் அது மடத்தில் காவல் காக்கும். மடத்திலிருந்து வழக்கமாக அன்னமிடுகிறவர்கள் ஒரு நாள் அன்னமிட மறந்துவிட்டால் அது அன்று பட்டினி தான் கிடக்கும். ஒரு சமயம் ஸ்வாமிகளை விட்டுப் பிரிய நேர்ந்த அந்த நாய் மீண்டும் ஸ்வாமிகளின் முகாமுக்கு ஓடிவந்துவிட்டது. அன்று முதல் அது உயிர் வாழ்ந்தவரை ஸ்வாமிகளை தரிசிக்காமல் ஆகாரம் உட்கொண்டதில்லையாம்.
ஜீவிதம் என்னவாக இருந்தாலும் ஜீவன் ஒன்று தான் என்பர். அது ஐந்தறிவு படைத்ததானாலும் சரி; ஆறறிவு படைத்ததானாலும் சரி; ஐயனின் கருணை ஜீவனுக்குத் தானே!
ஹே, பரமேஸ்வர சங்கரா! இருக்கும் வரையிலும் இருக்கட்டுமே நின் ஸ்மரணம் என்னிலும்!
"நெஞ்சமதில் நின்ற காஞ்சித் தெய்வநாயகன் தினம்
நெஞ்சமதில் ஆராதனை பெரும்தேவன் என்றும்
நினைத்ததும் என் மனத்தில் உதயமாவார் அவர்
நிலைபெற்ற நாயகர் என் காஞ்சிநாதர்
என் மனத்தில் என்றும் வீற்றிருப்பார்"





Courtesy :   Facebook post  : Krishnamoorthi Balasubramanian

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பரமேஸ்வரன் நானே"


                   "பரமேஸ்வரன் நானே"








சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சதாராவில் வஸந்த நவராத்திரி சமயம்.
புதுக்கோட்டையிலிருந்து நாங்கள் ஸுவாஸினி
பிக்ஷைக்காக சென்று அங்கு ஒரு வாரம்
தங்கியிருந்து வந்தோம்.

நாங்கள் பெரியவாளுக்கு விதவிதமான
மாலைகள்,கிரீடங்கள் தயாரித்து சமர்ப்பிப்போம்.

ஒருநாள் மாலைப்பொழுது, நாங்கள் பத்துப்பேர்
அமர்ந்து இருந்தோம். ஸ்ரீ பெரியவா அப்போது
வெளியில் வந்தார்கள்.நாங்கள் வந்தனம் செய்தோம்.
ராஜம் அம்மாள் ஒரு நாகாபரண கிரீடத்தை
சமர்ப்பித்தாள். அது வெட்டி வேரில் சந்தன மணி
வைத்து நாகக்குடை போல் மிக அழகாக 
அமைந்திருந்த கிரீடம்.

பெரியவா அந்தக் கிரீடத்தை வாங்கி அருகில்
இருந்த சிவலிங்கத்துக்கு சார்த்தச் சொல்லி
பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் கொடுத்தார்.

உடனே, அவசரமாக, ராஜம்மாள் "இதை பெரியவா
போட்டுக்கணும்!: என்று பிரார்த்தித்தாள்.

பெரியவாள், சிவலிங்கத்தை சுட்டிக்காட்டி
"நான் வேறு, இவர் வேறு இல்லை
நான்தான் இவர்,இவர்தான் நான்"
என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்தார்.

அப்போது மின்னல் போல் ஓர் ஒளி. அங்கு இருந்த
எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.என்ன பாக்யம்!
நாங்கள் சிலிர்த்துப் போய் வாய் அடைத்து
உட்கார்ந்து விட்டோம்.











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நானே நாராயணன்"



                                 "நானே நாராயணன்"




                 


சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்


என் பெண் ஜனா ஒரு 'ஐஸ்வர்ய கோலம்'
தயாரித்திருந்தாள்.கண்ணாடித் துண்டுகளை
ஒட்டி கலர் செய்து நடுவில் மஹாலக்ஷ்மி வைத்து
கண்ணாடி போட்ட கோலப் படம் அது.அதைப்
பெரியவாளிடம் சமர்ப்பித்தோம்.

அதை எடுத்துப் பார்த்து ரஸித்து விட்டு,
"இது மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியை நான் எங்கு
வைத்துக் கொள்ள வேண்டும்? மார்பில் தான்
இருக்கணும்" என்று சொல்லி அந்தப் படத்தை தன்
மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து
எல்லாருக்கும் அனுக்ரஹம் செய்தார்.

"நாராயணன் அம்சமும் நானே!" என்று பெரியவா
உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள்
புரிந்து கொண்டோம்.

திருச்சியை சேர்ந்த சுபலக்ஷ்மி அம்மாள் சொன்னாள்;
"பெரியவா! இன்று சோமவார அமாவாசை.
அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே
இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்"
என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம்
சொன்னாளாம்.

பட்டென்று பதில் வந்தது; "அதனாலென்ன?
என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு..
அதுவே போதும்.

பெரியவா நாராயணன் மட்டுமில்லே;
அசுவத்த நாராயணனும் கூட.!





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்

  காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்




                   



வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள்முகாமிட்டிருந்த நேரம். தெருவில் நடமாட்டமே இல்லை.
பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், 'ஆதிமூலமே' என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல....

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் 

அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;
ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !
சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த மஹாமுனிவர் தாள் பணிவோம்






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

குரு பக்தி........கண்ணீர் வழிந்தது.....


               குரு பக்தி........கண்ணீர் வழிந்தது.....









ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் சீடகளுக்கு
பாஷ்ய பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஸ்ரீ சங்கரரின் தாயார் 
சிவலோக ப்ராப்தி அடைந்த சமாசாரம் 
அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது. 
அவர் கண்களிலிருந்து தாமாகவே கண்ணீர்
சொரிந்தது. கண்ணீர் தாரை தானாகவே
வழிந்ததாகச் சொல்வார்கள். 

அதுபோல் ஸ்ரீ பெரியவாளுக்கு பைங்கனாடு
ப்ரும்மஸ்ரீ கணபதி ஸாஸ்த்ரிகள் சிறு வயதில் 
பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஒரு
சந்தர்ப்பத்தில் ஸாஸ்த்ரிகள்விண்ணுலகம் ஏகிய
செய்தி ஸ்ரீமடத்துக்குத் தெரிய வந்தது. அதைக்
கேட்டதும் பெரியவா கண்களிலிருந்து தாரையாக
கண்ணீர் வழிந்தது. 

ஸ்ரீபெரியவாளுக்கு பண்டிதர்களிடம் அசாத்யமான
ப்ரியம் இருந்ததுடன் , தன் குருவிடம் அளவில்லாத 
பக்தி இருந்தது தான் அதன் காரணம். அதனால்தான்
சன்னியாசிகள் எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படக்
கூடாது என்ற விதியை அந்த ஒரு சில நொடிகள் ஒதுக்கி
வைத்தார் போலும்.


ஸ்ரீபெரியவாளை ஈன்றெடுத்த அன்னை மறைந்தபோது
கூட நீராடல், சில மணித்துளிகள் மௌனம், உபவாசம்
நிகழ்ந்ததே அன்றி கண்ணீர் தோன்றவில்லை!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா














Courtesy :   Facebook post  :   Saraswathi Thyagarajan
Thanks to Adi Sankara  and  Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, April 22, 2015

ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்











    ஆஸ்திகனைக் காப்பாற்றிய நாஸ்திகன்



கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இது ஒரு மறு பதிவு.

ஒரு பக்தனைப் பெரியவா ஆந்திரா போய் வரச்சொன்னார்.

ரயிலில் அவருடைய பெட்டியில் அவர் அருகே ஒரு பிரபல
நாஸ்திகன்.! அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது.அது ஒரு முதல்வகுப்பு கூபே. அவர்கள் இரண்டேபேர்தான் இருந்தனர். பக்த சாஸ்திரிகள் பயந்து நடுங்கினார்.

"தன்னந்தனியாக ஒரு நாஸ்திகனிடம் மாட்டிக் கொண்டோமே!
என்ன செய்து விடுவானோ?" என்று நெஞ்சு 'திக்திக்'என்று
அடித்துக் கொண்டது. டிக்கெட் சரிபார்ப்பவர் வந்தால்
இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு விடலாமே என்று வழி
பார்த்திருந்தார். இரவு ஆனதும் தூங்க முடியாமல் தவித்தார்.

நாஸ்திகத் தலைவருக்கு சாஸ்திரிகள் பயப்படுவது புரிந்து விட்டது.

"ஐயரே! உட்காருங்கள்,எதற்காக பயப்படுகிறீர்கள்? வேறு
பெட்டிக்குப் போய்விடலாமென்றுதானே எண்ணம்? 

பயப்படாமல்பேசாமல்...தூங்குங்கள்.நான் எதுவும் செய்ய மாட்டேன். நீர்எங்கேயும் போக வேண்டாம். ஒண்ணு தெரியுமா? நாம் போறவழியில் ஒரிடத்தில் பெரிய கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது.

அதைத் தாண்டித்தான் நமது வண்டி போகணும். நீர் வேற
எங்கேயாவது இடம் மாற்றிக்கொண்டு சென்றால்,அடி,உதை,
கல்லடி என்று அகப்பட்டுக் கொள்வீர்.இங்கேயே இருங்கள்.
எனக்காக இந்தப் பெட்டியருகில் போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டிருக்கு. பேசாமல் என்னோடு
வந்தால் சௌகரியமாக ஊர் போய்ச் சேரலாம். பாவம்!பார்த்தால்
நல்லவராகத் தெரிகிறது.உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன்!"என்று நிலைமையை விளக்கினார். 

சாஸ்திரிகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

"என்னடா இது !மேடையில்ஏறினால்,பாம்பையும்,
பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று சொல்பவர்.எனக்கு அடி விழக்கூடாதென்று தன்னுடைய பாதுகாப்பில் அழைத்துச்செல்கிறாரே!" என்று காதுகளை நம்ப முடியாமல் திணறினார்.

ஒருவரை நெருங்கிப் பழகினால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.எல்லோரிடமும் நல்ல குணம்,கெட்ட குணம் என்று இரண்டும்இருக்கின்றன.எவரையும் வெறுக்கக் கூடாது என்று நினைக்கிறார்.

அதற்கு மேல் அதிசயம் என்னவென்றால், நாஸ்திகர் பெரியவாளைமிகவும் போற்றிய வண்ணம் பேசிக்கொண்டே வந்ததுதான்.

விடியற்காலை இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது.நாஸ்திகர்
சாஸ்திரிகளை எழுப்பி, அவர் பெட்டியை இறக்கிக் கீழே
வைப்பதிலும் உதவிசெய்து, "பெரியவாளுக்கு என் நமஸ்காரத்தைசொல்லுங்கள்!" என்று இரு கை கூப்பி வழியனுப்பி வைத்தார்.

இதுதான் பெரியவா மகிமை.அவரும் எல்லாரிடமும் ஒரே விதமான பிரியத்துடன்தானே இருந்தார். தன் பக்தன் கலாட்டாவில்மாட்டிக் கொள்ளாமல் பயணம் செய்ய பெரியவாளே செய்த ஏற்பாடோ இது என்று கூடத் தோன்றுகிறது.






                           



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.