Friday, April 17, 2015

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."
                


'தர்ஷன்'. இதழிலிருந்து.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்
இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும்
துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
ஒரு காலை வேளை.

அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது
அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி
வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார்.
எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் - சிக்கல் - பிரச்னை பெரியவாளிடம்
தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.

கண்கள் கெஞ்சுகின்றன - ;என்மீது தங்கள் அருட்பார்வை
படட்டுமே!' என்று உதடுகள் துடிக்கின்றன.
'நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என்று.

அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே
விரும்பினார்.

'ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது'
என்று விதி தடுக்கிறதே?.






அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்
கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா
அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே
ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

"ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது
கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் 
நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.."

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில்
ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய
ஒருவரையே, "பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு.....போதும்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு
வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே,
செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த
ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.




பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி
பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்....ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!
பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; 'நீங்களும் போகலாம்'

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில்,
ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: