Thursday, April 23, 2015

காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்

  காலத்தைக் கடந்தவர் காஞ்சி மஹா பெரியவர்




                   



வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள்முகாமிட்டிருந்த நேரம். தெருவில் நடமாட்டமே இல்லை.
பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், 'ஆதிமூலமே' என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல....

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் 

அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;
ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !
சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த மஹாமுனிவர் தாள் பணிவோம்






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: