Friday, April 17, 2015

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?


 "இன்னிக்கு- பாலா,பாதுகையா?







சொன்னவர்-என்.வெங்கட்டராமன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில்
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு
வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச் சென்று பூஜைக்
கட்டு அருகே வைப்பது என் வேலை. பெரியவாள் அந்தப்
பெரும் பாக்கியத்தை எனக்கு அளித்திருந்தார்.

ஒருநாள் காலை குளத்தில் படிக்கட்டில் உட்கார்ந்து
தண்ணீரில் பாதங்கள் நனைத்து 'விளையாடிக்
கொண்டிருந்தார்,பெரியவாள். சற்றுத் தொலைவில்
என் வயதொத்தப் பையன்கள். அப்போது ஒருவர்
பால் கொண்டு வந்து வைத்தார்.

'பால் எதுக்கு?'

'அபிஷேகத்துக்கு..'

'சரி...சரி..வை..'

சிறிது நேரம் கழித்து, ஸ்ரீ சுவாமிகள் எழுந்தார்.

சட்டென்று ஒரு பையன், பால் பாத்திரத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு விட்டான். எனக்கு ஆத்திரமாக
வந்தது. பாலை எடுத்துக்கொண்டு போவது என் உரிமை
அல்லவா? அதை,எப்படி இவன் தட்டிப் பறிக்கலாம்?.

மெல்லிய குரலில் சொன்னேன்; 'டேய்,பாலை எங்கிட்டக்
கொடுத்துடு. இல்லே... தொலைச்சுப்புடுவேன் !
ஆமா....கொடுடான்னா...'

அவன் கொடுக்காமல் படியேறிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ சுவாமிகளுக்கு, பாதுகையில் ஏதோ குத்திற்று போலும்.
கழற்றிவிட்டு,என்னைத் தூக்கிக்கொண்டு வரச்சொன்னார்
தூக்கிக் கொண்டேன். என்றாலும்,பால் கைமாறிப்
போய்விட்டதே?- என்ற கோபம் அடங்கவில்லை.
'மடத்துக்கு வா..உதைப்பேன்...செருப்பால் அடிப்பேன்'
என்றெல்லாம்,அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக
பொறுமிக் கொண்டே வந்தேன்.

ஸ்ரீமடம் வந்ததும், பாதுகையைக் கீழே வைக்கும்படி
ஆக்ஞையாயிற்று.பெரியவாள், காலில் 
போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

நான்,சொன்னபடி,அந்தப்பையனை வெளுத்துக்
கட்டி விட்டேன்.!.

அன்று சாயங்காலம். ஒரு வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்து கொண்டார் பெரியவாள்.
பத்திருபது பேர் கூட்டம்.

"இன்னிக்கு- பாலா,பாதுகையா?-என்ற
தலைப்பில் பேச்சு என்றார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பெரியவா
அவ்வப்போது சிற்றுரை நிகழ்த்துவார்தான்.
ஆனால், அதற்கெல்லாம் தலைப்பு கிடையாது.
ரத்தினம் போன்று தத்துவங்கள் பளிச்சென்று
தெறித்து விழும்.

நந்திக்கிராமத்தில்,எதற்கு பட்டாபிஷேகம்
தெரியுமோ?..பாதுகைக்கு!

சாதாரணமா. காலிலே போட்டுக்கிறதை செருப்புன்னு
சொல்லுவா. அதுதான் பாதரட்சை. அதையே
சந்யாசிகள் போட்டுண்டா, பாதுகை-ன்னு பேர்.

"பரதன், ஸ்ரீ ராமனோட பாதுகையை சிம்மாசனத்தில்
வைத்து அபிஷேகங்கள்-பாலாபிஷேகம்!-செய்தான்"

"அதனால், பால் ஒசத்தியா?இல்லே,
பாதுகை ஒசத்தியா?...

என்று சொல்லிவிட்டு, சட்டென்று, 'கோவிந்த நாம
சங்கீர்த்தனம்' என்று புண்டரீகம் போட்டு உரையை
முடித்து விட்டார்.






என் பொட்டில்,சம்மட்டியால் தட்டினாற்போல் 
இருந்தது.

எவ்வளவு பெரிய பாவி, நான். ரொம்ப ரொம்ப ஒசந்த
பாதுகையை எங்கிட்டக் கொடுத்து, எடுத்துண்டு
வரச் சொல்லியிருக்கா,பெரியவா. 

பாதுகையில் ஏதும் குத்தல்லே. எனக்கு அந்த 
பாக்கியத்தைக் கொடுக்கணும் என்பதற்காகவே,
அப்படி ஒரு நாடகம்.பைத்தியக்காரத்தனமாக
அந்தப் பையனைப் போய், தலைகால் புரியாமல் 
அடிச்சேனே...

எனக்குக் கிடைச்ச பாக்யத்தை என்னாலே புரிஞ்சுக்க
முடியாமல்,சுவாமி கண்ணை மறைச்சுட்டாரே...

இன்றைக்கும் கண்ணீர் துளிக்கத்தான் செய்கிறது.





                        




Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: