Friday, April 17, 2015

"கபட சந்யாஸி யார் " - ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும் நிறைய உண்டு.









கபட சந்யாஸி"
"பெரியவா கேட்ட காளிதாஸன் கதை"

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்
நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து
அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.
வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர
சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து
கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,
உடன் சென்று கொண்டிருந்தோம்.

"நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்
பார்த்திருக்கியா?"

"இல்லே"

"நாகராஜா....நீ"

"இல்லே.."

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, " நீ கபட சந்யாஸியைப்
பற்றிக் கேட்டிருக்கியா?" என்று கேட்டார்.

"கேட்டிருக்கேன்...ராவணன்,அர்ஜுனன்..." என்றேன்.

"அவ்வளவு தானா?"

நான் தயங்கியபடியே, "காளிதாஸன்..." என்றேன்.

"காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?.."

"பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,
நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

"இல்லை..நீயே சொல்லு.."

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த
காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான
சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி
கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது
போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்
பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற
முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி
எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி
செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.
பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள்பெற்று,மாறுவேஷத்தில்
போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு
சந்யாஸியைப் பார்த்தபோது, 'இவர் காளிதாஸனோ'
என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து
"நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.
அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.
வெளியே வந்து விட்டேன்..."

"ஆ!.... என் போஜன் இறந்துவிட்டானா?"
என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,
வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்
தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி
சியாமளா தண்டகம் பாடி, "இதோ,போஜன்
எழுந்துவிட்டான்!" என்ற பொருள்பட
இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.
கடைசியில் "இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,
சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்..." என்றேன்.

பெரியவாள்,"ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.
நடந்து வந்த களைப்பே தெரியல்லே!" என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: